sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் இன்று பொறுப்பேற்பு

/

யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் இன்று பொறுப்பேற்பு

யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் இன்று பொறுப்பேற்பு

யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் இன்று பொறுப்பேற்பு


ADDED : ஆக 08, 2024 01:26 AM

Google News

ADDED : ஆக 08, 2024 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் இன்று பொறுப்பேற்க உள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி வகார் உஜ் ஜமான் தெரிவித்துள்ளார்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சுதந்திர போராட்டத்தின்போது உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு வேலை மற்றும் கல்வியில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.

இதை எதிர்த்து, அங்குள்ள மாணவர்கள் கடந்த மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சட்டப்படி நடவடிக்கை

இதனால், ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால், நாட்டின் முக்கிய அடையாளங்கள், கோவில்கள், வீடுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

போர்க்களமாக மாறிய வங்கதேசத்தில், வன்முறை சம்பவங்களுக்கு இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி ஷேக் ஹசீனாவுக்கு ராணுவ தளபதி ஜெனரல் வகார் உஜ் ஜமான் கெடு விதித்தார்.

இதையடுத்து, பதவியை ராஜினாமா செய்த ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதைத் தொடர்ந்து, பார்லிமென்ட்டை கலைக்க அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டார்.

இடைக்கால அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்தார்.

இதுகுறித்து போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள், முப்படை தளபதிகள், மூத்த அதிகாரிகளுடன் அதிபர் ஷஹாபுதீன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, 2006ல் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், 84, தலைமையில் இடைக்கால அரசு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிபர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து அந்நாட்டு ராணுவ ஜெனரல் வகார் உஜ் ஜமான் கூறுகையில், “இடைக்கால அரசு இன்று இரவு 8:00 மணிக்கு பதவியேற்கவுள்ளது. இடைக்கால அரசின் ஆலோசனைக் குழுவில் 15 உறுப்பினர்கள் இருக்கலாம்.

“நாடு முழுதும் நிலைமை கணிசமாக மேம்பட்டு வருவதால், மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் இயல்பு நிலை திரும்பும். கடந்த சில நாட்களாக குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

வன்முறை வேண்டாம்

ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசில் உள்ள முகமது யூனுஸ் பதவியேற்பதற்காக இன்று வங்கதேசம் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவர்களை அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்துஉள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

இந்த வெற்றியை சிறந்த முறையில் பயன்படுத்துவோம். அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், மாணவர்கள் அனைவரும் அமைதியாக இருங்கள்.

வங்கதேசத்தை நாம் பாதுகாத்து, நமக்காகவும், நம் எதிர்கால சந்ததியினருக்காகவும் அற்புதமான நாடாக மாற்ற வேண்டும்.

எந்த அர்த்தமற்ற வன்முறையிலும் ஈடுபடுவதன் வாயிலாக அரிய வாய்ப்பை இழக்க வேண்டாம். வன்முறை நம் எதிரி.

தயவு செய்து அதிக எதிரிகளை உருவாக்காதீர்கள். அமைதியாக இருங்கள், நாட்டைக் கட்டியெழுப்பத் தயாராகுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊடுருவல் முயற்சி

இந்தியா - வங்கதேசம் 4,096 கி.மீ., எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அதில், 932 கி.மீ., மேற்கு வங்கத்தில் உள்ளது.வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கம் வழியாக நம் நாட்டுக்குள் 150க்கும் மேற்பட்டோர் நேற்று ஊடுருவ முயன்றனர். அவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையே, இடைக்கால அரசு அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியான போதிலும், வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் போராட்டங்கள் நடந்தன. கடைகளை அடைக்கச் சொல்லி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.



தொடருமா இந்திய ஆதரவு?

- நமது சிறப்பு நிருபர் -இந்தியா - வங்கதேசம் இடையே பல ஆண்டுகளாக நட்புறவு நீடித்து வருகிறது. அதன்படியே ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். இருப்பினும், வங்கதேசத்தில் புதிய இடைக்கால அரசு அமைய உள்ள நிலையில், அவருக்கான ஆதரவு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு அவருக்கு ஆதரவு அளிப்பதால், வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. அதேசமயம், ஹசீனா இங்கு இருப்பதால், அவரின் ஆதரவாளர்களும் இந்தியாவுக்கு படையெடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. ஹசீனாவை ஆதரிப்பது வாயிலாக வங்கதேசத்தை ஒட்டியுள்ள வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் கொந்தளிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்த பிரச்னைகளை கருத்தில் வைத்து, வங்கதேசத்தில் அமையவுள்ள இடைக்கால அரசுடனான பேச்சை உறுதி செய்வதற்கும், நம் நாட்டின் உறவு குறிப்பிட்ட தலைவருடன் அல்ல, மக்களுடன்தான் உள்ளது என்பதை வலியுறுத்துவதற்கும் சரியான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஷேக் ஹசீனா விசாவை

அமெரிக்கா ரத்து செய்தது ஏன்?வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அடைக்கல கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துவிட்டது. அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்கா அவரது விசாவை ரத்து செய்து விட்டது.இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது:வங்கதேசம் தன் பொருளாதாரத்துக்காக அமெரிக்காவை பெருமளவு சார்ந்துள்ளது. ஜவுளி துறை பொருட்கள் பெருமளவு வங்கதேசத்தில் இருந்து அமெரிக்காவுக்கு வருகின்றன. இதனால் அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வ உறவை ஹசீனா பராமரித்து வந்தார்.கடந்த சில மாதங்களாக, வங்கதேசம் - அமெரிக்கா இடையேயான உறவில் சிக்கல்கள் ஏற்பட்டன. வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தல் நியாயமாகவோ, சுதந்திரமாகவோ நடக்கவில்லை என, அதிபர் ஜோ பைடன் கூறினார்.அங்கு ஜனநாயகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சர்வாதிகாரம் தலைதுாக்கி உள்ளதாகவும் அவர் விமர்சித்தார். இதற்கு ஷேக் ஹசீனா பதிலடி தந்தார். வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா விரும்புவதாக கூறினார்.இதுபோன்ற காரணங்களால் தேர்தலுக்கு முன்பே வங்கதேச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்தது. தற்போது வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேற்றப்பட்டுள்ளதால், அவரது விசாவையும் அமெரிக்கா ரத்து செய்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.



இன்னும் சில நாட்கள் டில்லியில்

வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக இந்தியா வந்துள்ள ஷேக் ஹசீனா, டில்லியில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில நாட்கள் டில்லியில் தங்கியிருப்பார் என அவரது மகன் சஜீப் வாசெத் ஜாய் தெரிவித்தார். ஜெர்மன் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “என் தாய் அடைக்கலம் கேட்டு காத்திருப்பதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் புரளி. இதுகுறித்து இன்னும் அவர் முடிவெடுக்கவில்லை. அவருடன் என் தங்கையும் உள்ளார். இன்னும் சில நாட்கள் அவர் டில்லியில் இருப்பார்,” என்றார்.








      Dinamalar
      Follow us