ஓட்டு போடுவதற்கு ஊருக்கு படையெடுப்பு பெங்களூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஓட்டு போடுவதற்கு ஊருக்கு படையெடுப்பு பெங்களூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
ADDED : மே 07, 2024 05:33 AM
பெங்களூரு, : ஓட்டு போடுவதற்காக ஏராளமானோர், பெங்களூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றதால், பஸ்களில் கூட்ட நெரிசலும்; சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கூடுதல் பஸ்கள்
கர்நாடகாவில், இரண்டாம் கட்டமாக 14 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடப்பதால், பெங்களூரு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, பலரும் சொந்த ஊர்களுக்கு நேற்று புறப்பட்டனர்.
ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக, கே.எஸ்.ஆர்.டி.சி., சார்பில் நகரின் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
ஹூப்பள்ளி, தார்வாட், ஹாவேரி, தாவணகெரே, பெலகாவி, ஷிவமொகா, கார்வார், பல்லாரி, ராய்ச்சூர், கலபுரகி, பாகல்கோட் உட்பட தேர்தல் நடக்கும் நகரங்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
முன்பதிவு செய்தவர்களுக்கு இருக்கைகள் கிடைத்தன. முன்பதிவு செய்யாத ஏராளமான பயணியர், இருக்கைகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். கூட்ட நெரிசலிலேயே பயணம் செய்தனர். பச்சிளம் குழந்தைகள் வைத்திருக்கும் பெண்கள், முதியோர் பாதிக்கப்பட்டனர்.
நீண்ட வரிசை
இதனால், ராஜாஜிநகர், யஷ்வந்த்ப்பூர், ஜாலஹள்ளி கிராஸ், தாசரஹள்ளி, மாகடி சாலை, நெலமங்களா, தாபஸ்பேட் உட்பட துமகூரு, பல்லாரி சாலைகளில் நேற்று மதியம் முதல், இரவு வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டன. ஆங்காங்கே இரண்டு, மூன்று கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தன.
இதற்கிடையில், பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால், பலர் ரயில்களில் பயணம் செய்தனர். அதிலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. வேறு வழியின்றி பயணம் செய்தனர். பலர் குடும்பம், குடும்பமாக சொந்த வாகனங்களில் சென்றதால், நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.