எடியூரப்பா மீது புகார் அளித்த பெண் மரணம் குறித்து விசாரணை?
எடியூரப்பா மீது புகார் அளித்த பெண் மரணம் குறித்து விசாரணை?
ADDED : செப் 03, 2024 05:56 AM

பெங்களூரு : பெங்களூரில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் உதவி கேட்டு, 2024 பிப்ரவரி 2ம் தேதி, பெண் ஒருவர், தன் 17 வயது மகளுடன் சென்றார். அப்போது எடியூரப்பா, தன் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, மார்ச் 14ம் தேதி சதாசிவநகர் போலீசில் அப்பெண் புகார் அளித்தார்.
விசாரணை நடத்திய சி.ஐ.டி.,யினர், ஏப்ரல் 12ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பினர். அவரும், அன்றைய தினம் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். மீண்டும் ஜூன் 12ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு, சி.ஐ.டி., தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
அதற்கு எடியூரப்பா, கட்சி நிகழ்ச்சிக்காக டில்லியில் இருப்பதாகவும், ஜூன் 17ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், சி.ஐ.டி.,யோ, ஜூன் 13ம் தேதி, அவரை கைது செய்ய ஜாமினில் வெளி வரமுடியாத பிடிவாரன்ட் பெற்றது.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா மனு தாக்கல் செய்தார். அவரை கைது செய்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆக., 30ம் தேதி நடந்த இவ்வழக்கு விசாரணையில், எடியூரப்பாவை கைது செய்ய செப்., 5ம் தேதி வரை தடையை நீட்டித்தது.
இந்நிலையில், பெங்களூரில் நேற்று மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி அளித்த பேட்டி:
தன் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது புகார் அளித்த பெண், மே 27ம் தேதி ஹுலிமாவு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்தார்.
அப்பெண், நுரையீரல் புற்றுநோயால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரின் மரணம் குறித்து, அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் எப்படி திடீரென இறக்க முடியும்? அப்பெண்ணின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன.
அப்பெண்ணின் மரணம் குறித்தும், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது குறித்தும் உரிய விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
இவ்வாறு கூறினார்.