சப்பாத்தி, கறிக்குழம்பு விஷமானதா? ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
சப்பாத்தி, கறிக்குழம்பு விஷமானதா? ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
ADDED : ஆக 03, 2024 12:46 AM

ராய்ச்சூர், கர்நாடகாவில் சப்பாத்தி, கறிக்குழம்பு சாப்பிட்டு, ஒரே குடும்பத்தில் நால்வர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம், ராய்ச்சூர், சிரவாராவின் கல்லுாரு கிராமத்தில் வசித்தவர் பீமண்ணா, 60. இவரது மனைவி ஈரம்மா, 54. தம்பதிக்கு மல்லம்மா, 23, பார்வதி, 16, என்ற இரண்டு மகள்களும், மல்லேஷ், 19, என்ற மகனும் இருந்தனர்.
இவர்கள் வீட்டில் நேற்று முன்தினம் இரவு ஆட்டுக்கறி குழம்பும், சப்பாத்தியும் சமைக்கப்பட்டது. இதை தம்பதியும், பிள்ளைகளும் சாப்பிட்டு உறங்கச் சென்றனர்.
சிறிது நேரத்தில் இவர்கள் வாந்தி, வயிற்று வலியால் அவதிப்பட்டனர். அக்கம் பக்கத்தினர், அவர்களை ராய்ச்சூரின் ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சையில் இருந்த பீமண்ணா, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது மனைவி, மகள் பார்வதி, மகன் மல்லேஷ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். மற்றொரு மகள் மல்லம்மா, கோமா நிலைக்கு சென்றுள்ளார். இவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை தொடர்கிறது.
ராய்ச்சூர் கலெக்டர் நிதீஷ் நேற்று அளித்த பேட்டி:
கோமா நிலையில் உள்ள மல்லம்மாவை காப்பாற்ற முயற்சிக்கிறோம். முதற்கட்ட விசாரணையில், இவர்கள் சாப்பிட்ட உணவில் விஷத்தன்மை இருப்பது தெரிந்தது. அதன் மாதிரியை ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம்.
அக்கம் பக்கத்தினரை விசாரித்த போது, குடும்ப பிரச்னையால் இவர்கள் உணவில் விஷம் கலந்து, தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சிலர் உணவில் பல்லி விழுந்திருக்கலாம் என்கின்றனர். தடயவியல் அறிக்கை வந்தபின்னரே, எதுவும் தெளிவாக தெரியும். பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.