அணைகளின் பாதுகாப்பு ஆய்வு தொழில்நுட்ப குழு அமைக்க உறுதி
அணைகளின் பாதுகாப்பு ஆய்வு தொழில்நுட்ப குழு அமைக்க உறுதி
ADDED : ஆக 22, 2024 04:05 AM
பாகல்கோட்; “மாநில அணைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய, மத்திய குழுவினர் அடங்கிய தொழில்நுட்ப கமிட்டி அமைக்கப்படும். இந்த குழுவினர் மாநிலம் முழுதும், சுற்றுப்பயணம் செய்வர்,” என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பாகல்கோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநில அணைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய, மத்திய குழுவினர், மத்திய நீர் ஆணைய உறுப்பினர்கள் அடங்கிய தொழில்நுட்ப கமிட்டி அமைக்கப்படும். இந்த கமிட்டியினர், மாநிலம் முழுதும் சென்று, அணைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்வர்.
தொழில்நுட்ப கமிட்டியினர், அளிக்கும் அறிக்கை அடிப்படையில் அணைகளின் பாதுகாப்புக்கு, அரசு நடவடிக்கை எடுக்கும்.
கங்கா ஆரத்தி போன்று, கிருஷ்ணா ஆரத்தி நடத்த வேண்டும் என, அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், சிவானந்த பாட்டீல், திம்மாபுர் உட்பட, பல எம்.எல்.ஏ.,க்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். துங்கா ஆரத்தி ஏற்கனவே நடக்கிறது. காவிரி ஆரத்தி நடத்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கிருஷ்ணா ஆரத்தி நடத்தப்படும்.
கிருஷ்ணா மேலணைக்காக, நிலத்தை இழந்தவர்களுக்காக, இப்பகுதியின் மூன்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து, ஆலோசனை நடத்தப்படும். நிலத்தை இழந்தவர்களுக்கு மாற்று நிலம் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.