ADDED : ஆக 08, 2024 10:23 PM

பெங்களூரு : கொலை வழக்கில் சிறையில் உள்ள, நடிகர் தர்ஷனுக்கு வீட்டு உணவு சாப்பிட அனுமதி வழங்குவதற்கு, சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதுதொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில், அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.
சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33 என்பவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறை உணவு சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படுகிறது. உணவே விஷமாக மாறுகிறது. இதனால் வீட்டு உணவு சாப்பிட அனுமதிக்கும்படி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தர்ஷன் மனு செய்தார். நீதிபதி கிருஷ்ணகுமார் மனுவை விசாரித்தார்.
கடந்த மாதம் நடந்த விசாரணையின் போது, தர்ஷனுக்கு வீட்டு உணவு சாப்பிட உடனடியாக அனுமதி வழங்கும்படி, தர்ஷன் தரப்பு வக்கீல்கள் கேட்டு கொண்டனர். அவசரம் என்றால் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு செய்யுங்கள் என்று, நீதிபதி கிருஷ்ணகுமார் பரிந்துரைந்தார்.
இதனால், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், தர்ஷன் தரப்பில் மனு செய்யப்பட்டது. ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்விலும் வீட்டு சாப்பாடு சாப்பிட அனுமதி கிடைக்காது என்று கருதிய தர்ஷன், மனுவை வாபஸ் பெற்றார்.
பின், நீதிபதி நாகபிரசன்னா அமர்வில் புதிய மனு தாக்கல் செய்தார். தர்ஷனுக்கு வீட்டு உணவு வழங்கலாமா அல்லது வேண்டாமா என்பது பற்றி, சிறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, நீதிபதி நாகபிரசன்னா உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று சிறை அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில், 'சிறை உணவை சாப்பிடுவதால், தர்ஷனுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இதனால் அவர் வீட்டு உணவு சாப்பிட அனுமதிக்க முடியாது. சிறையின் உணவு மெனுவில் என்ன இருக்கிறதோ, அதன்படி உணவு கொடுக்கிறோம்' என்று கூறப்பட்டு உள்ளது.