ADDED : ஜூன் 20, 2024 05:43 AM

கொப்பால்: ''முதல்வர் சித்தராமையாவை மண் திருடன் என்று கூறிய ஜனார்த்தன ரெட்டி, முதல்வரின் கால் துாசிக்கு கூட சமமானவர் இல்லை,'' என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கொப்பாலில் பா.ஜ.,வினர் நடத்திய போராட்டத்தில், 'சித்தராமையாவை மண் திருடன்' என்று ஜனார்த்தன ரெட்டி கூறியிருந்தார்.
இதை கண்டித்து, நேற்று நகரில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் அமைச்சர் சிவராஜ் தங்கடகி பேசியதாவது:
மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில், பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை தாண்டி உள்ளது. ஜனார்த்தன ரெட்டி பா.ஜ.,வில் இணைந்த பின், அக்கட்சியின் தலைவர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக துடித்து கொண்டிருக்கிறார்.
முதல்வர் சித்தராமையாவின் கால் துாசிக்கு கூட சமம் இல்லாதவர் ஜனார்த்தன ரெட்டி, இது பல்லாரி அல்ல; கொப்பால். கடந்த சட்டசபை தேர்தலில் மக்களுக்கு பொய்யான வாக்குறுதி கொடுத்து, இவர் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டது மக்களுக்கு தெரியும்.
இதனால் லோக்சபா தேர்தலில் கங்காவதி தொகுதியில், 16,000 ஓட்டுகள் முன்னிலையில் எங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். வரும் நாட்களில், மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவர்.
முதல்வர் குறித்து தரக்குறைவாக பேசிய ஜனார்த்தன ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவருக்கு எதிராக போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு பேசினார்.