ADDED : செப் 08, 2024 02:21 AM
பெங்களூரு:'மூடா' என்ற மைசூரு நகர மேம்பாட்டு ஆணைய முறைகேட்டு விவகாரத்தில் சிக்கியுள்ளதால், கர்நாடக முதல்வரை மாற்றுவது குறித்து காங்கிரஸ் மேலிடம் யோசிக்கிறது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சட்டவிரோதமாக, 14 மனைகளை, 'மூடா' வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் குறித்து கவர்னர் விசாரணை நடத்த அனுமதி அளித்ததும், அரசியல் வட்டாரம் சுறுசுறுப்படைந்தது. இப்பிரச்னை தற்போது உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
ஜனாதிபதிக்கு கடிதம்
மற்றொரு புறம், காங்கிரஸ் நடத்திய போராட்டங்களை சுட்டிக்காட்டி, தன்னால் வெளியே சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதிக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் கடிதம் எழுதினார்.
இது, மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்பது பற்றி மறைமுகமாக புகார் கூறுவதாகும். ஜனாதிபதிக்கும் உள்துறைக்கும் கவர்னர் அறிக்கை அளித்துள்ளதை அடுத்து, முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
அதனால், முதல்வரை மாற்றுவது குறித்து காங்., மேலிடம் ஆலோசிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
தனித்தனியே ஆலோசனை
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில், முதல்வர் பதவியை எதிர்பார்ப்பவர்கள் பட்டியல் மிக நீளம்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் என, தினமும் பலர் சேர்ந்து வருகின்றனர்.
இதற்காக அனைத்து தரப்பினருடனும் தனித்தனியே ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்னும் எந்த முடிவுக்கும், காங்., மேலிடம் வரவில்லை என்பதால் தினமும் ஒவ்வொருவராக ஆசையை வெளியிட்டு வருகின்றனர்.
அதனால், யாருக்கும் அதிருப்தி இல்லாமல், ஒரு மனதாக முதல்வரை முடிவு செய்யும் வகையில் நம்பிக்கைக்குரியவரை மேலிடம் தேடுகிறது.