திருமணத்திற்கு மறுத்ததால் கத்திக்குத்தில் விதவை பலி
திருமணத்திற்கு மறுத்ததால் கத்திக்குத்தில் விதவை பலி
ADDED : ஆக 01, 2024 11:08 PM
துமகூரு: திருமணத்திற்கு மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்ட விதவை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துமகூரு, கொரட்டகெரே அருகே புட்டனஹள்ளி கொல்லரஹட்டி கிராமத்தில் வசித்தவர் பவ்யா, 28. இவருக்கு திருமணம் முடிந்து விட்டது. 7 வயதில் ஒரு மகன் உள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பவ்யாவின் கணவர் உடல் நலக்குறைவால் இறந்தார். மகனுடன் தனியாக வசித்தார்.
பவ்யாவுக்கும், ராமாச்சாரி, 30, என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். சில தினங்களுக்கு முன்பு ராமாச்சாரி, பவ்யா இடையில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ராமாச்சாரியுடன் பேசுவதை தவிர்த்தார்.
கடந்த மாதம் 25ம் தேதி இரவு பவ்யா வீட்டிற்கு சென்ற ராமாச்சாரி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து விட்டார்.
ஆத்திரமடைந்த ராமாச்சாரி, பவ்யாவை கத்தியால் குத்தி விட்டு ஓட்டம் பிடித்தார். உயிருக்கு போராடிய பவ்யா மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த ராமாச்சாரி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் காப்பாற்றப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவ்யா, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.