ADDED : மார் 28, 2024 10:47 PM

ஹாசன் : குடிசையில் துாங்கிக் கொண்டு இருந்த, வடமாநில தம்பதியின் 9 மாத பெண் குழந்தையை, மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம், சத்மா மாவட்டம் வீரசிங்பூரை சேர்ந்தவர் ரோகித். இவரது மனைவி சஞ்சு. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஆண் குழந்தையும், ஒன்பது மாத பெண் குழந்தையும் இருந்தனர்.
மனைவி, பிள்ளைகளுடன் கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், சக்லேஷ்பூர் தாலுகா மலாலி கிராமத்தில், ரோஹித் வசித்து வருகிறார். செங்கல் சூளையில் ரோகித் வேலை செய்கிறார்.
மலாலி கிராமத்தில் குடிசை அமைத்து வசிக்கின்றனர். நேற்று காலை ரோஹித்தும், சஞ்சுவும் ஆற்றில் குளிக்கச் சென்றனர். குடிசைக்குள் 4 வயது ஆண் குழந்தை, ஒன்பது மாத பெண் குழந்தை துாங்கிக் கொண்டு இருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் குடிசைக்குள் புகுந்த மர்ம நபர்கள், ஒன்பது மாத பெண் குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளனர்.
ரோஹித், சஞ்சு ஆற்றில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, குழந்தை மாயமானதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்தனர்.
சக்லேஷ்பூர் போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடக்கிறது.

