கே.எல்.இ., மருத்துவமனை வளர்ச்சியில் பங்கு? லட்சுமி ஹெப்பால்கருக்கு பிரபாகர் கோரே பதிலடி
கே.எல்.இ., மருத்துவமனை வளர்ச்சியில் பங்கு? லட்சுமி ஹெப்பால்கருக்கு பிரபாகர் கோரே பதிலடி
ADDED : மே 04, 2024 10:56 PM

பெலகாவி: காங்கிரஸ் அரசு, வெறும் ஒரு ரூபாய்க்கு நிலம் கொடுத்ததால், கே.எல்.இ., மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகம் வளர்ந்ததாக கூறிய, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்கு, பிரபாகர் கோரே பதிலடி கொடுத்துள்ளார்.
பெலகாவி லோக்சபா தொகுதியில், அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் மகன் மிருணாள், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். மகனுக்கு ஆதரவாக லட்சுமி ஹெப்பால்கர், பெலகாவியில் நேற்று முன் தினம் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர், 'காங்கிரஸ் அரசு வெறும் ஒரு ரூபாய்க்கு, நிலம் கொடுத்ததால், கே.எல்.இ., மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகம் வளர்ந்துள்ளது' என்றார்.
இவருக்கு பதிலடி கொடுத்து, கே.எல்.இ., நிறுவன செயல் தலைவர் பிரபாகர் கோரே நேற்று கூறியதாவது:
கே.எல்.இ., நிறுவனத்தின் வரலாறு தெரியாமல், அமைச்சர் பேசுவது சரியல்ல. இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். கே.எல்.இ., நிறுவனம் 108 ஆண்டுகள் வரலாறு கொண்டது.
நன்கொடையாளர்கள், சிரசங்கி லிங்கராஜர், ராஜலகமகவுடா, பூமரெட்டி, பசப்பா உள்ளிட்டவர்களின் தியாகத்தால், கே.எல்.இ., பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ், பா.ஜ., என்ற பேச்சுக்கே இடமில்லை.
கே.எல்.இ., நிறுவனம் தன் சொந்த பணத்தில், சொத்துகளை வாங்கியது. அந்தந்த கால கட்டங்களில் இருந்த அரசுகளின் உதவி, ஒத்துழைப்பை பெற்றது. காங்கிரஸ் உதவியால் மட்டும் கே.எல்.இ., மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகம் கட்டியதாக கூறுவது துரதிர்ஷ்டவசமானது.
நிறுவனத்தின் நிர்வாகத்தில், அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் உள்ளனர். கே.எல்.இ., நிறுவனம் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்து இல்லை. கல்வி நிறுவனத்தில் நாங்கள் அரசியலை கொண்டு வரமாட்டோம். இதன் வளர்ச்சிக்காக, அனைவரின் ஒத்துழைப்பை பெறுவோம்.
இந்த மண்ணின் கல்வி நிறுவனங்களின், உண்மையான வரலாற்றை லட்சுமி ஹெப்பால்கர் புரிந்து கொண்டதை போன்று தெரியவில்லை. ஓட்டுக்காக பொய் சொல்லி, மக்களின் உணர்வுடன் விளையாடுவது காங்கிரசுக்கு அழகல்ல. தன் பேச்சை அமைச்சர் திரும்பப் பெற்று, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.