ADDED : ஏப் 01, 2024 11:45 PM

தன் மருமகன் சிக்க பெத்தண்ணாவுக்கு கோலார் லோக்சபா தொகுதியில் 'சீட்' பெற, கர்நாடக உணவுத்துறை அமைச்சர் முனியப்பா டில்லியில் தங்கி பெரும் முயற்சி செய்தார். யார், யாரை எல்லாமோ நாடினார். ஆனால், எதுவும் பலிக்கவில்லை.
அவரது அரசியல் எதிரிகளின் ராஜ தந்திரம் வென்றது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவில்லை. கட்சியின் மேலிட உத்தரவுக்கு பணிவதாக மேலோட்டமாக கூறிவிட்டு, பெட்டியுடன் ஊருக்குத் திரும்பினார்.
நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் உள்ள, கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் வீட்டில், கோலார் காங்கிரஸ் வேட்பாளர் கவுதம் வெற்றிக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், லோக்சபா தொகுதிக்குட்பட்ட முக்கிய கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
திட்டமிட்ட படி, நேற்று, கோலார் மாவட்டம், முல்பாகலில் உள்ள பிரசித்தி பெற்ற குருடு மலை கணபதி கோவில், ஆஞ்சநேய சுவாமி கோவில், ஹைதர் வாலி தர்காவில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பின்னர், தனியார் திருமண மண்டபத்தில் முல்பாகல் தொகுதியை சேர்ந்தோர் பிரசாரக் கூட்டம் நடத்தினர். அமைச்சர்கள் பைரதி சுரேஷ், சுதாகர், எம்.எல்.ஏ.,க்கள் நஞ்சேகவுடா, கொத்துார் மஞ்சுநாத், நாராயணசாமி, எம்.எல்.சி.,க்கள் நசீர் அகமது, அனில் குமார், முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
இதையடுத்து, நேற்று மாலையில் சிந்தாமணியில் கூட்டம் நடந்தது. எந்த கூட்டத்திலும் தந்தையான உணவு அமைச்சர் முனியப்பா, மகளான தங்கவயல் எம்.எல்.ஏ., ரூபகலா பங்கேற்கவில்லை.
இன்று கோலார், மாலுார் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்க உள்ளது. வரும் 4ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். இந்நிகழ்ச்சிகளில் தந்தையும், மகளும் பங்கேற்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- நமது நிருபர் -
