கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் கார்கோ லாரி சேவை திட்டம் தோல்வி
கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் கார்கோ லாரி சேவை திட்டம் தோல்வி
ADDED : ஜூலை 29, 2024 05:49 AM

பெங்களூரு : போக்குவரத்து துறையால் துவங்கப்பட்ட கே.எஸ்.ஆர்.டி.சி., 'கார்கோ லாரி' சேவை திட்டம் தோல்வி அடைந்தது.
பெங்களூரில் ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்யும், தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கனரக பொருட்களை, வேறு மாவட்டங்களுக்கு எடுத்து செல்ல, தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், தனியார் பார்சல் சேவைகளை நாடுகின்றனர்.
பெங்களூரு நகரில் இருந்து மைசூரு, துமகூரு, தாவணகெரே, பெலகாவி, சித்ரதுர்கா உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும், பார்சல் நிறுவனங்களின் லாரிகளில் பொருட்களை எடுத்து செல்கின்றன.
பொருட்கள் சேதம்
ஆனால் சில நேரத்தில் தனியார் பார்சல் சேவை நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், லாரியில் எடுத்து செல்லும் போது பொருட்களுக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டால், பார்சல் நிறுவனங்கள் பொறுப்பு ஏற்பது இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால் கர்நாடக அரசு, பார்சல் சேவை துவங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ம் தேதி, கே.எஸ்.ஆர்.டி.சி., கார்கோ லாரி சேவையை, போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி துவங்கி வைத்தார். ஆறு டன் எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்லும் வகையில், 20 கார்கோ லாரிகள் அறிமுகப் படுத்தப்பட்டன.
பெங்களூரில் இருந்து ஷிவமொகா, தாவணகெரே, தார்வாட், கோலார், மைசூரு, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, கார்கோ லாரி இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கார்கோ சேவை மூலம் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டலாம் என்றும், போக்குவரத்து துறை கணக்கு போட்டது.
புத்துாயிர் அளிக்க...
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., கார்கோவுக்கு வரவேற்பு இல்லை. சேவை துவங்கப்பட்டதில் இருந்து, இதுவரை வெறும் இரண்டு கோடி ரூபாய் தான் வருமானம் கிடைத்து உள்ளது.
போதிய வரவேற்பு இல்லாததால் 20 லாரிகளில் 14 லாரிகள், டிப்போக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பஸ்களுக்கு தேவையான உதிரிபாகங்களை எடுத்து செல்ல, கார்கோ லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மக்களுக்கு போதிய தகவல் இல்லாததால், கார்கோ சேவை தோல்வி அடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் கார்கே திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க, போக்குவரத்து துறை சில திட்டங்களை, யோசனையில் வைத்து உள்ளது.
சுகாதார துறையிடம் பேசி மருத்துவமனைகளுக்கு மருந்துகள், தளவாட இயந்திரங்களை எடுத்து செல்ல, கார்கோ லாரிகளை பயன்படுத்த கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் யோசிக்கிறது.

