' பெங்களூரு தரிசனம்' திட்டம் பி.எம்.டி.சி.,க்கு பாராட்டு
' பெங்களூரு தரிசனம்' திட்டம் பி.எம்.டி.சி.,க்கு பாராட்டு
ADDED : மே 15, 2024 09:40 AM
பெங்களூரு : பி.எம்.டி.சி.,யின் 'பெங்களூரு தரிசனம்' சுற்றுலா பஸ்கள், அதிகமான வருவாயை கொண்டு வருகின்றன. இத்திட்டத்துக்கு சுற்றுலா பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
டிக்கெட் கட்டணம், பஸ்கள் மற்றும் பஸ் நிலையங்களில் விளம்பர போர்டுகள் என, பல வழிகளில் பி.எம்.டி.சி.,க்கு வருவாய் கிடைக்கிறது. அதேபோன்று 'பெங்களூரு தரிசனம்' திட்டம் மூலமாகவும் நல்ல வருவாய் கிடைக்கிறது. சொகுசு 'ஏசி' பஸ்களில் பெங்களூரு நகரின், முக்கியமான சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கும் இத்திட்டத்தை, 2015ல் பி.எம்.டி.சி., செயல்படுத்தியது.
தினமும் பெங்களூருக்கு உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இங்குள்ள சுற்றுலா தலங்களை காண விரும்புகின்றனர். இவர்களுக்கு பெங்களூரு தரிசனம் சொகுசு 'ஏசி' பஸ்கள் வசதியாக உள்ளன.
மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, பெங்களூரு தரிசனம் பஸ் புறப்படுகிறது. இதில் பயணித்து விதான் சவுதா, திப்பு சுல்தான் அரண்மனை, புல் டெம்பிள், லால்பாக், விஸ்வேஸ்வரய்யா மியூசியம் உட்பட 12 சுற்றுலா தலங்களை பார்க்கலாம். பெரியவர்களுக்கு 400 ரூபாய், சிறியவர்களுக்கு 300 ரூபாய் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு சுற்றுலா பயணியரிடம, அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக, பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 2021 முதல் 2024 ஏப்ரல் வரை, 17,800 பயணியர், பெங்களூரு தரிசனம் போக்குவரத்து சேவையை பயன்படுத்தியனர். பி.எம்.டி.சி.,க்கு 72.59 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கொரோனா இருந்த போது, பெங்களூரு தரிசனம் பஸ்சில் பயணித்தோரின் எண்ணிக்கை, குறைவாக இருந்தது. தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது. பெங்களூரு தரிசனம் குறித்து, நாளிதழ், சமூக வலைதலங்கள் மூலமாக விளம்பரம் செய்யப்படுகிறது. இன்னும் அதிகமான விளம்பரம் செய்தால், பயணியர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
பெங்களூரு தரிசனம் பஸ்களில் பயணிக்கும் சுற்றுலா பயணியரிடம், பொறுமையுடன் நடந்து கொள்வது குறித்து, ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர்கள் தமிழ், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் பேசுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
***

