நாளிதழ் வினியோகிப்போருக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு
நாளிதழ் வினியோகிப்போருக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு
ADDED : ஜூலை 10, 2024 04:56 AM
பெங்களூரு, : விபத்து காப்பீடு மற்றும் மருத்துவ சேவை பெறுவதற்காக கர்நாடக நாளிதழ் வினியோகிப்போருக்கு, தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
கர்நாடகாவில் அதிகாலையில் ஆயிரக்கணக்கானோர், நாளிதழ்களை சைக்கிள், இரு சக்கர வாகனங்களில் சென்று வீடு, வீடாக வினியோகம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு செல்லும்போது, சிலர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இதனால், அவரை நம்பி இருக்கும் குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நாளிதழ் வினியோகிப்பவர்களுக்கு மருத்துவ சேவை, விபத்து காப்பீடு வழங்க வேண்டும் என்று அச்சங்கத்தினர் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சமூக பாதுகாப்பு
இதுதொடர்பாக கர்நாடக தொழிலாளர் நலத்துறைக்கு உட்பட்ட கர்நாடக மாநில அமைப்பு சாரா தொழிலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அமைப்பு சாரா தொழிலாளர்களான நாளிதழ் வினியோகிக்கும் தொழிலாளர்களுக்கு விபத்து இழப்பீடு, மருத்துவ உதவிகள் வழங்குவதன் மூலம், சமூக பாதுகாப்பு பலன்களை வழங்குவது நோக்கமாகும்.
பதிவு செயல்முறை
www.eshram.gov.in என்ற இணையதளம் அல்லது அருகில் உள்ள சி.எஸ்.சி., எனும் பொது சேவை மையம், 'கர்நாடகா ஒன், பெங்களூரு ஒன், கிராமம் ஒன்' மையங்களுக்குச் சென்று நாளிதழ் வினியோகிப்போர் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
இதர தகவல்
தகுதி வாய்ந்த அனைத்து பயனாளிகளும் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தை, தேவையான ஆவணங்களுடன் அருகில் உள்ள தொழிலாளர் நல அலுவலகம் / மூத்த / தொழிலாளர் ஆய்வாளர் அலுவலத்தில் சமர்ப்பித்து பலனடையலாம்.
தகுதி என்ன?
கர்நாடகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்; வயது 16 முதல் 59 வரை இருத்தல்; ஈஸ்ராம் இணையதளத்தில் 'நியூஸ் பேப்பர் பாய்' என்ற பிரிவில் பதிவு செய்திருத்தல்; வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது; இ.பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., பயனாளியாக இருக்கக் கூடாது.
தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை; ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்; வங்கி கணக்கு விபரம் கொண்ட ஆவணங்கள் தேவை.
பலன்கள் என்ன?
விபத்தில் மரணமடைந்தால் 2 லட்சம் ரூபாய்; விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் 2 லட்சம் ரூபாய்; விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.