ADDED : ஆக 08, 2024 11:57 PM

மங்களூரு: பலாத்கார முயற்சியில் 13 வயது சிறுமியை, துண்டால் கழுத்தை இறுக்கி கொன்ற, தொழிலாளி கைது செய்யப்பட்டு உள்ளார்.
மங்களூரு அருகே ஜோக்கடே பகுதியில் வசிப்பவர் ஹனுமந்தா. இவரது உறவுக்கார தம்பதி பெலகாவியில் வசிக்கின்றனர்.
இந்த தம்பதியின் மகள் 13 வயது சிறுமி. இவருக்கு அடிக்கடி இடது கையில் வலி ஏற்பட்டது. கை வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக, ஹனுமந்தா வீட்டிற்கு சிறுமியை, பெற்றோர் அனுப்பி வைத்தனர்.
கடந்த 6ம் தேதி ஹனுமந்தாவும், அவரது மனைவியும் வெளியே சென்று இருந்தனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். ஹனுமந்தா, அவரது மனைவி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, படுக்கை அறையில் சிறுமி இறந்து கிடந்தார்.
அவரது கழுத்தில் துண்டு சுற்றப்பட்டு இருந்தது. சிறுமியை, கழுத்தை இறுக்கி மர்ம நபர்கள் கொன்றது தெரிந்தது. பனம்பூர் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று முன்தினம் ஹனுமந்தா வீட்டின் அருகே வசிக்கும் பக்கீரப்பா ஹனுமப்பா மாதர், 51 என்பவரை பிடித்து, போலீசார் விசாரித்தனர்.முதலில் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
இதில், 'சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றேன். இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்தார். வெளியே சொல்லி விடுவார் என்ற பயத்தில், துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்' என்று, ஒப்புக் கொண்டார்.
அவரை போலீசார் கைது செய்தனர். சிறுமியை, பக்கீரப்பா பலாத்காரம் செய்து கொன்று இருக்கலாம் என்று, போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.