வக்கீல் சைத்ரா தற்கொலை வழக்கு சி.சி.பி.,க்கு மாற்றம்
வக்கீல் சைத்ரா தற்கொலை வழக்கு சி.சி.பி.,க்கு மாற்றம்
ADDED : மே 30, 2024 10:05 PM

பெங்களூரு, - கர்நாடக உயர் நீதிமன்ற வக்கீல் சைத்ரா கவுடா தற்கொலை வழக்கை சி.சி.பி., விசாரணைக்கு மாற்றி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா உத்தரவிட்டு உள்ளார்.
பெங்களூரில் நிருபதுங்கா ரோட்டில் உள்ள, கர்நாடக தொழிற்சாலை பகுதி வளர்ச்சி ஆணைய அலுவலகத்தில், உதவி ஆணையராக வேலை செய்பவர் சிவகுமார்.
இவரது மனைவி சைத்ரா கவுடா, 35. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றினார். கடந்த 11ம் தேதி இரவு, சஞ்சய்நகரில் உள்ள வீட்டில், சைத்ரா கவுடா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடிதத்தில், 'என் சாவுக்கு நானே காரணம்' என்றும் எழுதி இருந்தார். சஞ்சய்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால், 'சைத்ரா கவுடா மனதிடமான பெண். அவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதால், உரிய விசாரணை நடத்த வேண்டும்' என்று, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தாவுக்கு, வக்கீல்கள் சங்கம் கடிதம் எழுதியது.
இதையடுத்து, சைத்ரா கவுடா தற்கொலை வழக்கை, சி.சி.பி., விசாரணைக்கு மாற்றி, போலீஸ் கமிஷனர் தயானந்தா உத்தரவிட்டுள்ளார்.
சைத்ரா கவுடா, தன் மொபைல் போனுக்கு, 'பாஸ்வேர்டு' போட்டு உள்ளார். அது தெரியவில்லை. இதனால் அவரது மொபைல் போனை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்ப, போலீசார் தயாராகி வருகின்றனர்.
மேலும் சைத்ரா கவுடா செய்த பண பரிமாற்றம், அவரது வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரிக்கவும், போலீசார் முடிவு செய்துள்ளனர்.