ADDED : செப் 10, 2024 10:19 PM
கோலார்:
கோலார் மாவட்டத்தில் வனவிலங்குகளின் தொல்லை, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் விளை பொருட்களும், உயிர் சேதமும் ஏற்பட்டு வருகிறது.
பங்கார்பேட்டை தாலுகாவின் பல கிராமங்களில் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசமாக்கி உள்ளன. கடந்த ஐந்தாண்டுகளில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
வனப்பகுதியில் இருந்து யானைகள் விளை நிலங்களுக்குள் வருவதை தடுக்க விவசாயிகள் சோலார் மின் வேலிகள் அமைத்துள்ளனர்.
கரடிகள், காட்டு பன்றிகளும் நடமாட துவங்கி உள்ளன. காய்கறிகள், கிழங்கு வகைகளை நாசப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கோலாரின் அப்பனி கிராமத்தில் வீட்டின் அருகே கட்டி போட்டு இருந்த ஆடுகளை 8ம் தேதி இரவில் இரு சிறுத்தைகள் வேட்டையாடியுள்ளன.
இதில் ஐந்து ஆடுகள் உயிரிழந்தன. ஆறு ஆடுகள் படுகாயம் அடைந்தன.
சிறுத்தை நடமாட்டத்தால் கிராமத்தினர் பீதி அடைந்துள்ளனர். ஆடுகளை இழந்த விவசாயி நடராஜய்யா, கோலார் மாவட்ட வனத்துறை அதிகாரியை சந்தித்துப் பேசினார். சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் பலியான ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கும்படியும் கோரிக்கை விடுத்தார்.

