ADDED : ஜூலை 07, 2024 03:03 AM

கோலார்: ''வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் பணத்தை முறைகேடு செய்தவர்கள், தொழுநோய் வந்து சாகட்டும்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் சாபமிட்டு உள்ளார்.
கோலார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத், கோலாரில் நேற்று அளித்த பேட்டி:
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்திருப்பது நன்றாக தெரிகிறது. இதுகுறித்து சி.ஐ.டி., விசாரித்து வருகிறது.
விசாரணை சரியாக நடக்கவில்லை என, எனது மனதிற்கு தோன்றினால், விசாரணையை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைப்பேன்.
முறைகேட்டில் ஈடுபட்டோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு தொழுநோய் ஏற்பட்டு சாகட்டும்.
மூடாவில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு பற்றி விசாரணை நடக்கிறது. பா.ஜ., -- எம்.எல்.சி., விஸ்வநாத் கூறும் குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என, மடாதிபதி சந்திரசேகர சுவாமிகள் கூறியது சரியல்ல. மடாதிபதிகள் தயவுசெய்து அரசியல் விஷயங்களில் தலையிட வேண்டாம். அரசியலில் தலையிட்டால் அவர்கள் மீதான மதிப்பு குறையும்.
கோமுல் பால் விவசாயிகளுக்கு ஆதரவு விலை குறைத்துள்ளது. இது சரியான முடிவு இல்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசுவோம். விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது.
இவ்வாறு அவர்கூறினார்.