ADDED : மே 09, 2024 05:29 AM
ஹாசன் : நடுரோட்டில் ரவுடியை வெட்டிக் கொன்ற வழக்கில், எதிர்கோஷ்டியைச் சேர்ந்த 9 ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னராயப்பட்டணா செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.
ஹாசன் சென்னராயப்பட்டணாவைச் சேர்ந்தவர் மாஸ்தி கவுடா என்கிற கிருஷ்ணா, 30. பிரபல ரவுடி யாச்சேனஹள்ளி சேட்டின் கூட்டாளியாக இருந்தார். பின்னர் அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர்.
கடந்த 2020ல் பாண்டுகிரண் என்ற ரவுடியை, யாச்சேனஹள்ளி சேட், அவரது கூட்டாளிகள் கடத்திச் சென்று, ஐந்து லட்சம் ரூபாய் பறித்தனர். இதனால் பாண்டுகிரண், மாஸ்தி கவுடாவுடன் சேர்ந்து, யாச்சேனஹள்ளி சேட்டை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
'ஸ்கெட்ச்'
அதன்படி 2021ல் சென்னராயப்பட்டணா ஊரகப் பகுதியில் வைத்து, யாச்சேனஹள்ளி சேட்டை, பாண்டுகிரண், மாஸ்தி கவுடா கும்பல், ஆயுதங்களால் தாக்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார்.
அவர் மீது பல வழக்குகள் இருந்தால் போலீசார் கைது செய்து, கலபுரகி சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்தபடியே, மாஸ்தி கவுடாவை தீர்த்துக்கட்ட, கூட்டாளிகளுக்கு, யாச்சேனஹள்ளி சேட் 'ஸ்கெட்ச்' போட்டுக் கொடுத்தார். கடந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி, சென்னராயப்பட்டணாவில் உள்ள தனலட்சுமி தியேட்டர் முன், மாஸ்தி கவுடாவை, யாச்சேனஹள்ளி சேட்டின் கூட்டாளிகள் ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர்.
சிறையில் அடைப்பு
இந்த கொலை தொடர்பாக, மாண்டியாவை சேர்ந்த சிவகுமார் என்கிற சிவு, உளிவாலா சேட், ராகேஷ், சுமந்த், பரத், ஹரிஷ், ராகுல், ரகு ஆகிய, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னராயப்பட்டணா செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் மாஸ்தி கவுடா கொலைக்கு மூளையாக செயல்பட்ட யாச்சேனஹள்ளி சேட் மீதும் கொலைக்கான ஆதாரங்களை போலீசார் சமர்ப்பித்து இருந்தனர்.
இந்த வழக்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி அருண் சதாசிவா நேற்று தீர்ப்பு கூறினார்.
யாச்சேனஹள்ளி சேட் கலபுரகி சிறையில் உள்ளார். மற்ற 8 பேரும் ஹாசன் சிறையில் அடைக்கப்பட்டனர்.