ADDED : ஆக 15, 2024 03:50 AM

மாண்டியா, : மாண்டியாவின் மிம்ஸ் மருத்துவமனையின், மருந்துகள் சேகரிக்கும் கிடங்கில், லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். காலாவதியான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மாண்டியாவின், அரசு சார்ந்த 'மிம்ஸ்' மருத்துவமனையின் கிடங்கில், காலாவதியான மருந்துகளை இருப்பு வைத்துள்ளனர். இதுதொடர்பாக, கேசவ மூர்த்தி என்பவர், லோக் ஆயுக்தாவில் புகார் செய்தார்.
லோக் ஆயுக்தா அதிகாரிகள், நேற்று காலை மிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள, மருந்துகள் சேகரிப்பு கிடங்கில் அதிரடி சோதனை நடத்தினர். கிடங்கில் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை மருத்துவமனை நிர்வாகம் வாங்கியிருந்தது.
விதிமுறைப்படி, எந்த மருந்துகள் என்றாலும், காலாவதி ஆவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, நிறுவனத்திடம் திரும்பக் கொடுத்து, மாற்று மருந்துகளை பெற வேண்டும். இந்த விதிகளை, மருத்துவமனை அதிகாரிகள் அலட்சியம் செய்துள்ளனர்.
மிம்ஸ் அதிகாரிகளின் செயலால், அரசு கருவூலத்துக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. காலாவதியான மருந்துகளை, லோக் ஆயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.