கோர்ட்டில் ஆஜராகாத ராகுலுக்கு ரூ.200 அபராதம்; லக்னோ கோர்ட் உத்தரவு
கோர்ட்டில் ஆஜராகாத ராகுலுக்கு ரூ.200 அபராதம்; லக்னோ கோர்ட் உத்தரவு
ADDED : மார் 06, 2025 08:02 AM

லக்னோ: சாவர்க்கர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் ஆஜராகாத காங்., எம்.பி., ராகுலுக்கு ரூ.200 அபராதம் விதித்து லக்னோ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிரா அகோலா மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்ட காங்., முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல், சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசினார்.
இது தொடர்பாக வக்கீல் நிருபேந்திர பாண்டே என்பவர் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு லக்னோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, மார்ச் 5ம் தேதி ராகுலை நேரில் ஆஜராக கூடுதல் தலைமை நீதிபதி அலோக் வர்மா உத்தரவிட்டிருந்தார். ஆனால், கோர்ட்டில் ராகுல் ஆஜராகவில்லை. மாறாக, அவரது சட்டக் குழுவினர் ராகுல் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், அவதூறு வழக்கில் ஆஜராகாத ராகுலுக்கு ரூ.200 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்.,14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.