'ஆன்லைன்' சூதாட்டத்துக்காக சொந்த வீட்டில் திருடியவர் கைது
'ஆன்லைன்' சூதாட்டத்துக்காக சொந்த வீட்டில் திருடியவர் கைது
ADDED : செப் 14, 2024 08:11 AM
பொம்மனஹள்ளி: ஆன்லைன் சூதாட்டத்துக்கு, தன் வீட்டிலேயே தங்க நகைகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, பொம்மனஹள்ளியின் விராட் நகரில் வசிக்கும் நபருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்காக தங்க நகைகள் வாங்கி, வீட்டின் லாக்கரில் வைத்திருந்தார்.
சில நாட்களுக்கு முன், திருமண அழைப்பிதழ் கொடுக்க, காலையில் வெளியே சென்றிருந்த குடும்பத்தினர், மாலையில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது, லாக்கரில் இருந்த தங்க நகைகளும், 45,000 ரூபாயும் திருட்டு போனது தெரிந்தது.
குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தபோது, இளைய மகன் மட்டும் வீட்டில் இருந்தார். எனவே அவர் மீது சந்தேகம் உள்ளதாக, பொம்மனஹள்ளி போலீஸ் நிலையத்தில், தந்தையே புகார் செய்தார்.
விசாரணை நடத்திய போலீசார், எலஹங்கா ரயில் நிலையம் அருகில், புகார்தாரரின் மகனை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கநகை, 100 கிராம் கடவுளின் வெள்ளி முகம் ஆகியவை மீட்கப்பட்டன.
இளைய மகன் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையானவர். சூதாட்டத்துக்கு பணம் இல்லாமல், அண்ணனின் திருமணத்துக்கு வாங்கிய நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.