உணவு பொருட்களில் உள்ள சத்துக்கள் பெரிய எழுத்தில் வெளியிட உத்தரவு
உணவு பொருட்களில் உள்ள சத்துக்கள் பெரிய எழுத்தில் வெளியிட உத்தரவு
ADDED : ஜூலை 08, 2024 01:52 AM

புதுடில்லி : பாக்கெட்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் லேபிள்களில், அதில் உள்ள சத்துக்கள் தொடர்பான விபரங்கள் பெரிய எழுத்தில் இடம்பெற வேண்டும் என்ற திருத்தத்துக்கு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
உணவு பொருட்களின் தரத்தை உறுதி செய்யும் வகையில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உணவு பொருட்கள் தொடர்பான தவறான, திசை திருப்பும் வகையிலான தகவல்களை வெளியிடுவதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக, ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்படும் பொருட்களில், ஊட்டச்சத்து பானம் என்ற பெயரை பயன்படுத்த தடை விதித்தது. அதுபோல, 100 சதவீதம் பழரசம் என்பதை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இந்த வகையில், நுகர்வோருக்கு உண்மையான தகவல்கள் கிடைப்பதையும், உடல்நல பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும், தற்போது புதிய முடிவை, உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் எடுத்துள்ளது.
அதன்படி, பாக்கெட்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் லேபிள்களில், அதில் உள்ள ஊட்டச்சத்து விபரங்கள் பெரிய எழுத்துகளில் இடம்பெற வேண்டும். குறிப்பாக, அதில் உள்ள சர்க்கரை, உப்பு போன்றவற்றின் அளவு குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டும்.
இது தொடர்பான அறிவிப்பாணை, அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. அதனடிப்படையில், இது விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.