இந்தியா - சீனா போர் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையில் மணிசங்கர்
இந்தியா - சீனா போர் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையில் மணிசங்கர்
UPDATED : மே 30, 2024 05:37 AM
ADDED : மே 30, 2024 01:52 AM

'இந்தியா - சீனா இடையே, 1962ல் நடந்த போர் குறித்து காங்., மூத்த தலைவர் மணிசங்கர் தெரிவித்த கருத்து, நாட்டின் ஒருமைபாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமின்றி, ஒவ்வொரு ராணுவ வீரர்களையும் அவமானப்படுத்துவதாக உள்ளது' என, பா.ஜ., தெரிவித்துள்ளது.
காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர், கடந்த சில நாட்களுக்கு முன், அளித்த பேட்டியின்போது, பாகிஸ்தான் அணுகுண்டு வைத்துள்ளதால், அந்நாட்டைக் கண்டு நாம் அச்சப்பட வேண்டுமென்று பேசி, சர்ச்சையை கிளப்பினார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் நடந்த புத்தக வெளியீட்டு விழா தொடர்பான நிருபர்கள் சந்திப்பில் பேசிய மணிசங்கர் அய்யர், ''கடந்த 1962ல் நடந்த இந்தியா - சீனா போரின் போது, சீனர்கள் நம் நாட்டுக்குள் ஊடுருவி ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது,'' என்றார்.
சீனா அப்பட்டமாக ஊடுருவல் செய்தது என்பது வரலாறு. அப்படியிருக்கையில், ஊடுருவல் நடந்ததென கூறப்படுவதாக மணிசங்கர் தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தன் தவறை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட மணிசங்கர் அய்யர், ''சீன ஊடுருவலை குறிப்பிடும்போது, ஊடுருவல் நடந்ததென கூறப்படுவதாக வாய் தவறி சொல்லிவிட்டேன். தவறாக பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்'' எனக்கூறினார்.
'மணிசங்கர் அய்யரின் கருத்து, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல. அவரது கருத்துக்கும், கட்சிக்கும் சம்பந்தமில்லை' எனக்கூறி வழக்கம் போல காங்., ஒதுங்கிக்கொண்டது.
ஆனாலும், மணிசங்கர் அய்யரின் பேச்சை, பா.ஜ., விடுவதாக இல்லை. இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா டில்லியில் நேற்று கூறியதாவது:
மணிசங்கரின் கருத்துக்கு மல்லிகார்ஜுன கார்கேவும், ராகுலும் ஏன் அமைதி காக்கின்றனர். அவர்களது அனுமதி இல்லாமல் மணிசங்கர் இப்படி பேசியிருக்க முடியுமா. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு குறித்து அனைவருக்கும் தெரியும்.
சர்வதேச அளவில் இந்தியா மிகுந்த பெருமையுடன் நிற்கிறது. காரணம், சீனாவை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் இந்தியா வைத்துள்ளது.
இந்த நேரத்தில், காங்கிரசும் மணிசங்கர் அய்யரும் தரக்கூடிய சிக்னல்கள் வாயிலாக அக்கட்சி இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் இருப்பது தெளிவாகிறது.
இந்த பேச்சு, இந்தியாவின் ஒருமைப்பாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். மூவர்ண தேசிய கொடிக்காக, உயிர் நீத்த, ஒவ்வொரு ராணுவ வீரரும் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பேச்சு, மணிசங்கரின் கருத்தல்ல. ராகுலின் சிந்தனை. இவ்வாறு, அவர், கூறினார்.
-நமது டில்லி நிருபர்-