ADDED : செப் 07, 2024 07:45 AM

பெங்களூரு: காதலியை பார்க்க பெங்களூரு வந்த, மாவோயிஸ்ட் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.
சி.பி.எம்., எனும் மாவோயிஸ்ட் அமைப்புக்கு, 2009ல் மத்திய அரசு தடை விதித்தது. இந்த அமைப்புக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டனர்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அனிருத் ராஜன், 35, என்பவர், அந்த அமைப்புக்கு ஆதரவாக, கட்டுரைகள் எழுதி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதும், அந்த அமைப்புக்கு ஆள்சேர்ப்பு, நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். தன் காதலியை சந்திக்க பெங்களூரு வந்த அனிருத், நேற்று முன்தினம் சென்னைக்கு செல்ல,
மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். இதுபற்றி சி.சி.பி.,யின் பயங்கரவாத தடுப்பு படைக்கு தகவல் கிடைத்தது.
பஸ் நிலையம் சென்று, அனிருத்தை மடக்கி கைது செய்தனர். அவர் வைத்திருந்த பையில் இருந்து இரண்டு பென்டிரைவ்கள், ஒரு மொபைல் போன், போலி ஆதார் அட்டை ஆகியவை கைப்பற்றப்பட்டது.
உப்பார்பேட் போலீஸ் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவானது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். அனிருத் கைது செய்யப்பட்டதை, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று உறுதி செய்தார்.