தேர்தல் முடிவதற்கு முன்பே மத்திய அமைச்சர் பதவிக்கு குறி
தேர்தல் முடிவதற்கு முன்பே மத்திய அமைச்சர் பதவிக்கு குறி
ADDED : மே 21, 2024 09:52 PM
மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 2014ல் முதல் முறை மோடி ஆட்சியில், கர்நாடகாவை சேர்ந்த அனந்தகுமார், சதானந்தகவுடா, சித்தேஸ்வர், ரமேஷ் ஜிகஜினகி, அனந்தகுமார் ஹெக்டே ஆகிய ஆறு பேர் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்தனர்.
பின், 2019ல் மோடியின் இரண்டாவது ஆட்சியில் மாநிலத்தின், சதானந்தகவுடா, பிரஹலாத் ஜோஷி, சுரேஷ் அங்கடி, ஷோபா, நாராயணசாமி, பகவந்த் கூபா ஆகிய ஏழு பேருக்கு மத்திய அமைச்சர்கள் பதவி அளிக்கப்பட்டது.
மூன்றாவது முறை
இது தவிர, கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி., பதவி வகித்த வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், ராஜிவ் சந்திரசேகர் ஆகியோருக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டன. இம்முறை மூன்றாவது முறையாக, மத்தியில் பா.ஜ., ஆட்சி அமையும் பட்சத்தில், தங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் ஆசையில் பலரும் உள்ளனர்.
இதற்காகவே பல மூத்த தலைவர்கள், லோக்சபா தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தந்திரம் வகுத்தனர்.
குறிப்பாக, தாங்கள் வெற்றி பெற்றால், அமைச்சர் பதவி கண்டிப்பாக கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் சிலர் காத்திருக்கின்றனர்.
அந்த வரிசையில் முதலில் இருப்பவர் தற்போதைய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி.
தேர்தலின் போது, இவருக்கு ஆதரவாக, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தமிழக தலைவர் அண்ணாமலை என தேசிய, மாநில தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
அடுத்து, முன்னாள் முதல்வர்கள் பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர்; முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, தற்போதைய மத்திய அமைச்சர்கள் ஷோபா, பகவந்த் கூபா; வேட்பாளர்கள் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, பி.சி.மோகன், தேஜஸ்வி சூர்யா, ஸ்ரீராமுலு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
வழிபாட்டு தலங்கள்
ஆனால், இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் பா.ஜ., ஆட்சி அமையும் வரை காத்திருக்க வேண்டும். தங்களின் கனவு நனவாக வேண்டும் என்று இப்போதே ஆன்மிக வழிபாட்டு தலங்களுக்கு பலரும் குடும்பத்தினருடன் படை எடுத்து உள்ளனர். மேலும், தங்களின் ஆதரவான அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கின்றனர். அவர்கள் மூலம் காய் நகர்த்த துவங்கி உள்ளனர்.
- நமது நிருபர் -

