ADDED : ஆக 02, 2024 10:15 PM
கங்கமனகுடி : தன் 15 வயதில் திருமணம் செய்த சிறுமி, கணவர் தொல்லையால் 17 வயதில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு, கங்கமனகுடி அருகே கம்மகொண்டனஹள்ளியில் வசிக்கும் தம்பதியின் 17 வயது மகளுக்கு, 2022ல் இன்ஸ்டாகிராம் மூலம், கிரேன் ஆப்பரேட்டர் கவுசிக், 21, என்பவரின் பழக்கம் கிடைத்தது. இருவரும் காதலித்தனர்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்போது, சிறுமிக்கு 15 வயது தான் ஆகியிருந்தது.
குழந்தை திருமணம் செய்தது பற்றி கவுசிக் மீது, சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்கவில்லை. திருமணத்திற்கு பின், சிறுமிக்கு பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்து 11 மாதங்கள் ஆகின்றன.
கடந்த சில மாதங்களாக சிறுமிக்கு கவுசிக் வீட்டுச் செலவிற்கும், குழந்தையை பராமரிப்பதற்கும் பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையில் அடிக்கடி பிரச்னையும் ஏற்பட்டுள்ளது.
மனம் உடைந்த சிறுமி கடந்த 30ம் தேதி இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தலைமறைவாக இருந்த கவுசிக், நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ, குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது.