வீட்டு வாசலில் மருத்துவ சிகிச்சை தினேஷ் குண்டுராவ் தகவல்
வீட்டு வாசலில் மருத்துவ சிகிச்சை தினேஷ் குண்டுராவ் தகவல்
ADDED : ஆக 08, 2024 05:57 AM
பெங்களூரு: மக்களின் வீட்டு வாசலுக்கு மருத்துவ சிகிச்சையை கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசு தயாராகி வருகிறது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:
மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க, மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களின் வீட்டு வாசலுக்கே, மருத்துவ சிகிச்சை வசதியை கொண்டு செல்ல, அரசு முடிவு செய்துள்ளது. வரும் செப்டம்பரில் திட்டம் செயல்படுத்தப்படும்.
முதல் கட்டமாக, மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில், வீட்டு வாசலில் மருத்துவ சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்படும். அதன்பின் மற்ற மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப்படும்.
நீரிழிவு, ரத்த அழுத்தம் உட்பட மற்ற உடல் ஆரோக்கிய பிரச்னைகள் உள்ள நோயாளிகளால், பல சந்தர்ப்பங்களில் மருந்து, மாத்திரைகள் சாப்பிட முடிவதில்லை.
இத்தகைய பிரச்னை உள்ளவர்களுக்கு, மூன்று மாதங்களுக்கு தேவையான மாத்திரைகள், அவர்கள் வீட்டில் கொண்டு சேர்க்கப்படும். நீரிழிவு நோயை கண்டுபிடிக்கும் நோக்கில், மாவட்ட மருத்துவமனைகளில், சமுதாய நீரிழிவு சிகிச்சை மையங்கள் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.