கூத்தாட்டுக்குளம் கோயிலில் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி
கூத்தாட்டுக்குளம் கோயிலில் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி
ADDED : ஜூலை 17, 2024 12:39 AM

எர்ணாகுளம் : கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளத்தில் 'அவுஷதேஸ்வரி (பகவதி)' கோயிலில் ஆடிமாதத்தை முன்னிட்டு நோய் தீர்க்கும் அருமருந்தை பிரசாதமாக வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது.
கூத்தாட்டுக்குளத்தில் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் உள்ளது. இதன் வளாகத்தில் உள்ளது இக்கோயில். விரதம் இருந்து இங்குள்ள அம்மனை வழிபட்டால் கண்நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நோய் குணமாக்கும் அருமருந்து பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இதற்கான நிகழ்ச்சி நேற்று மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சூரியகாலடி சூரியன் பரமேஸ்வர பட்டத்தரிப்பாடு தலைமையில் மகா கணபதி ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. ஸ்ரீதரீயம் மருத்துவமனை தலைவர் என்.பி.நாராயணன் நம்பூதிரி, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நாராயணன் நம்பூதிரி, ஆலய நிர்வாகி ஹரிநம்பூதிரி கலந்து கொண்டனர்.
ஆக.16 வரை தினமும் காலை 7:30 முதல் 10:30 மணி வரையும், மாலையில் 5:30 முதல் இரவு 7:30 மணி வரையும் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. கோயில் பற்றிய விவரங்களை அறிய 94478 75067ல் தொடர்பு கொள்ளலாம்.