தேர்தலில் போட்டியிடவில்லை மெஹபூபா முப்தி அறிவிப்பு
தேர்தலில் போட்டியிடவில்லை மெஹபூபா முப்தி அறிவிப்பு
ADDED : ஆக 29, 2024 01:21 AM

ஸ்ரீநகர், : “அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 விவகாரத்தில் கட்சியின் கொள்கையை நிறைவேற்ற முடியாது என்பதால், சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை,” என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி அறிவித்துள்ளார்.
ஜம்மு -- காஷ்மீர் சட்ட சபைக்கு செப்., 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
ரத்து செய்வோம்
அக்., 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து, காங்கிரஸ், பா.ஜ., தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்டவை போட்டிப்போட்டு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:
நான் கடந்த 2016ல் பா.ஜ., கூட்டணியில் முதல்வராக இருந்தபோது, 12,000 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற்றேன்.
பிரிவினைவாதிகளை பேச்சுக்கு அழைப்பது குறித்து அவர்களுக்கு கடிதம் அனுப்பினேன். போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொண்டேன். அவற்றை எல்லாம் இப்போது செய்ய முடியுமா? ஒரு முதல்வராக பொறுப்பெற்றாலும் எதையும் செய்ய முடியாவிட்டால், அதனால் என்ன பயன்?
கடந்த 2002ல் பொடா சட்டத்தை ரத்து செய்வோம் என்றோம்.
எல்லைக் கட்டுப்பாடு கோடுகளை திறப்போம் என சொன்னோம். இவற்றையும் நாங்கள் செய்து முடித்தோம்.
பிரச்னை
மக்கள் ஆதரவின் அடிப்படையிலும், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் நாங்கள் போராடி வருகிறோம். ஆனால், இன்னும் தீர்க்கப்படாத பிரச்னையாக 370வது சட்டப்பிரிவு உள்ளது. அதை மீட்டெடுப்பது மிகவும் முக்கியம்.
மாநிலத்தின் முதல்வராக நான் பதவியேற்றாலும், மத்திய அரசின் சார்பில் செயல்படும் துணை நிலை கவர்னரையே சார்ந்திருக்கும் நிலை ஏற்படும். அதனால், கட்சியின் கொள்கையான, சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவதை நிறைவேற்ற முடியாது என்பதால், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் இடையிலான கூட்டணி குறித்து விமர்சித்த மெஹபூபா முப்தி, ''இரு கட்சிகளும் அதிகாரத்தைக் கைப்பற்றவே இணைந்துள்ளன,'' என்றார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட மக்கள் ஜனநாயக கட்சி தேர்தல் அறிக்கையில், மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 மற்றும் 35ஏ பிரிவுகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கோள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

