அலங்கோலமான சுரங்க நடைபாதைகள்: அக்கறை காட்டாத மாநகராட்சி அதிகாரிகள்
அலங்கோலமான சுரங்க நடைபாதைகள்: அக்கறை காட்டாத மாநகராட்சி அதிகாரிகள்
ADDED : ஆக 25, 2024 10:24 PM

பெங்களூரு:
பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட், ராஜ்பவன் ரோடு, அரண்மனை ரோட்டில் உள்ள சுரங்க நடைபாதைகள், மோசமான நிலையில் உள்ளன.
பெங்களூரின் கே.ஆர்.மார்க்கெட், ராஜ்பவன் ரோடு, அரண்மனை ரோடுகளில் வாகன போக்குவரத்து நெருக்கடி அதிகம். மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்கள், பாதசாரிகளை அச்சுறுத்துகின்றன. பாதசாரிகள் உயிரை கையில் பிடித்தபடி, ரோடுகளை கடந்து செல்கின்றனர். இதனால் விபத்துகள் அதிகரிக்கின்றன.
இதை மனதில் கொண்டு, பாதசாரிகளின் வசதிக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு, பெங்களூரு மாநகராட்சி சுரங்க நடைபாதைகள் கட்டியது.
இதை கட்டுவதில் காண்பித்த ஆர்வத்தை, நிர்வகிப்பில் காண்பிக்கவில்லை. இங்கு துாய்மை இல்லை. மழை பெய்தால் சில நடைபாதை சுரங்கங்களில் தண்ணீர் தேங்குகிறது.
நாள் முழுதும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள், லட்சக்கணக்கான பொதுமக்கள், பயணியரால் பரபரப்பாக இருக்கும் கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் பல ஆயிரக்கணக்கான பஸ்கள், வாகனங்கள் இயங்குகின்றன. பாதசாரிகளின் வசதிக்காக 18 கோடி ரூபாய் செலவில் கட்டபட்ட சுரங்க நடைபாதை, தற்போது சீர் குலைந்துள்ளது.
எஸ்கலேட்டர் பழுதடைந்து, மூன்று மாதங்கள் கடந்துள்ளன. இதை பழுது பார்ப்பதில், மாநகராட்சி அதிகாரிகள் அக்கறை காண்பிக்கவில்லை.
மார்க்கெட், பஸ் நிலையம், விக்டோரியா மருத்துவமனைக்கு வரும் பலரும், சுரங்க நடைபாதையை பயன்படுத்த தயங்குகின்றனர். சுரங்கப்பாதை நுழைவு வாசலில் மலை போன்று குப்பை குவிந்துள்ளது. துர்நாற்றத்துடன் நடமாட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே இந்த சுரங்கப்பாதை அருகில் வருவதையே மக்கள் நிறுத்தி விட்டனர்.
பசவேஸ்வரா சதுக்கம் அருகில், அரண்மனை ரோட்டில் உள்ள சுரங்கப்பாதையின் மேற்கூரை சிதிலமடைந்துள்ளது; நீர் கசிகிறது. மழை பெய்யும் போது ஏரி போன்று மாறுகிறது. எனவே, சுரங்கப்பாதையை பயன்படுத்தாமல், வாகனங்களுக்கு இடையிலேயே ரோட்டை கடந்து செல்கின்றனர்.
விதான் சவுதாவில் இருந்து கூப்பிடு தொலைவில் உள்ள, ராஜ்பவன் ரோட்டில் உள்ள சுரங்க நடைபாதையின், ஒரு ஓரத்தில் உள்ள கேட் எப்போதும் மூடியிருக்கும். மழை நீரை வெளியேற்ற மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள மின் ஒயர்கள், படிகளின் மேலேயே போட்டுள்ளனர். இதை தவறி மிதித்தால், மின்சாரம் தாக்கும். எனவே சுரங்கப்பாதை சகவாசமே தேவையில்லை என, மக்கள் நினைக்கின்றனர். மாற்று வழியில் செல்கின்றனர்.
'இவற்றை சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

