மெட்ரோ துரித நடவடிக்கை; உயிர் தப்பிய 4 வயது சிறுவன்
மெட்ரோ துரித நடவடிக்கை; உயிர் தப்பிய 4 வயது சிறுவன்
ADDED : ஆக 02, 2024 10:16 PM

பையப்பனஹள்ளி : பையப்பனஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் விளையாடியபடி சென்ற 4 வயது சிறுவன், தண்டவாளத்தில் தவறி விழுந்தான். மெட்ரோ பணியாளர்களின் துரித நடவடிக்கையால், சிறு காயங்களுடன் உயிர் தப்பினான்.
பையப்பனஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு, நேற்று முன்தினம் இரவு, 4 வயது சிறுவனுடன், அவனது பெற்றோர் வந்திருந்தனர்.
தங்கள் உடைமைகளை பெற்றோர் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, சிறுவன், பிளாட்பாரத்தில் விளையாடியபடி முன்னால் சென்றான். இதை பார்த்த மற்றவர்கள், குழந்தையை பிடிக்கும்படி பெற்றோரிடம் கூறினர்.
அவர்களும் மகனை எச்சரித்து உரத்த குரலில் சத்தம் போட்டபடி, பிடிக்கச் சென்றனர். அச்சமடைந்த சிறுவன், பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் விழுந்தான்.
இதை பார்த்த பாதுகாப்பு ஊழியர்கள், உடனடியாக மெட்ரோ பாதையில் மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் சிறுவன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினான்.
மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
குழந்தை மீட்கப்பட்ட பின், கட்டுப்பாட்டாளர் சென்று பார்த்தபோது, குழந்தையின் இடது காதில் சிறு காயம் ஏற்பட்டிருந்தது. குழந்தை பெற்றோருடன், சர் சி.வி.ராமையா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையை விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு ஸ்கேனிங் செய்து பார்த்தபோது, எந்த பாதிப்பும் இல்லை என்பதால், சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.
இந்த சம்பவத்தால் அன்றிரவு 9:08 முதல் 9:15 மணி வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அதன்பின், ரயில்கள் இயங்க துவங்கின.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.