யமுனையில் 13 லட்சம் கிலோ குப்பை அகற்றம் அமைச்சர் பர்வேஷ் வர்மா தகவல்
யமுனையில் 13 லட்சம் கிலோ குப்பை அகற்றம் அமைச்சர் பர்வேஷ் வர்மா தகவல்
ADDED : மார் 05, 2025 08:09 PM

புதுடில்லி:“யமுனை நதியில் இருந்து 10 நாட்களில் 13 லட்சம் கிலோ குப்பை அகற்றப்பட்டுள்ளது,”என, டில்லி நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறினார்.
யமுனை நதியில் குப்பை அகற்றும் பணி நடந்து வருகிறது. அமைச்சர் பர்வேஷ் வர்மா யமுனை நதியில் படகில் சென்று, குப்பை அகற்றும் பணியை நேற்று ஆய்வு செய்தார். யமுனை நதி மற்றும் கரைப் பகுதியில் செய்ய வேண்டிய தூய்மைப் பணி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின் நிருபர்களிடம் வர்மா கூறியதாவது:
டில்லி மாநகர் முழுதும் அனைத்து வடிகால்களும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன் இணைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் யமுனை நதியில் கலப்பதைத் தடுக்க அவற்றின் திறன் அதிகரிக்கப்படும்.
சட்டசபைத் தேர்தலில் யமுனை நதியை சுத்தம் செய்வதாக பா.ஜ., வாக்குறுதி அளித்து இருந்தது. அதன்படி, ஆட்சி அமைத்தவுடனேயே யமுனையில் குப்பை அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டது.
கடந்த 10 நாட்களில் யமுனையில் இருந்து 13 லட்சம் கிலோ குப்பை அகற்றப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு வெள்ளத்தால் டில்லி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தற்போது வெள்ளத் தடுப்புக் கதவுகள் சீரமைக்கப்பட்டு, உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
யமுனை நதியை முழுமையாக சுத்தம் செய்து மீட்டெடுப்பதே டில்லி அரசின் முக்கிய நோக்கம். யமுனை நதியில் ரசாயனக் கழிவுகளை முறையாக அகற்றுவதை உறுதி செய்வதற்காக தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிகளில் பொதுவான சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
அதேபோல, வெள்ளப் பெருக்கைத் தடுக்க ஐ.டி.ஓ., பேரேஜ் வாயில்களில் பாதுகாப்பு சுவர்களை சீரமைத்து, அதன் உயரத்தை அதிகரிக்கும் பணிகள் நடக்கின்றன. மேலும், யமுனை நதிக்கரையை சுத்தம் செய்யவும், பசுமை மண்டலங்களை மேம்படுத்தவும் சிறப்பு இயக்கங்கள் நடத்தப்படுகிறது.
யமுனை நதிக்கரையை சுற்றுலா மற்றும் கலாசார மையமாக மாற்ற டில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளோம்.
யமுனையை மீட்டெடுக்கும் பணியில் டில்லி அரசு மட்டுமின்றி, பிரதமரும் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.