ADDED : மே 26, 2024 06:49 AM

பெங்களூரு: “கர்நாடக தலைவர் பதவிக்காக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நான் தயார்,” என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலுக்கு பின், மாநிலத் தலைவர் மாற்றப்படுவார் என, காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இப்பதவிக்கு சில மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் துண்டு போடுகின்றனர். இவர்களில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணாவும் ஒருவர்.
இந்த விவகாரம் குறித்து பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
மாநிலத் தலைவர் பதவி கொடுத்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். மாநிலத் தலைவரை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், தலைவர் பொறுப்பை ஏற்க, நான் தயார்.
இனி நான் எந்த தேர்தலிலும் போட்டியிடமாட்டேன். எனக்கு தலைவர் பதவி கிடைத்தால், கட்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைப்பேன்.
காங்கிரஸ் அரசு அமைந்து, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஐந்து ஆண்டுகள் முழுமையாக சித்தராமையா முதல்வராக, சிவகுமார் துணை முதல்வராக இருப்பர் என, வேணுகோபால் கூறியுள்ளார். ஆனால் தேர்தல் முடிவு வெளியான பின், மாற்றங்கள் ஏற்படலாம்.
யாராவது மொபைல் போனில் தொடர்பு கொண்டால், 'பேச மாட்டேன்' என்று என்னால் கூற முடியாது. எங்களை நெருக்கடியில் சிக்கவைக்க, முயற்சி நடக்கிறது. அறிமுகம் இல்லாத பெண்கள், எனக்கு போன் செய்தால் நான் பேசுவதில்லை. அந்த எண்ணை நான் பிளாக் செய்வேன்.
மொபைல் போன் பயன்படுத்துவதில், நான் 'எக்ஸ்பர்ட்' இல்லை. போன் செய்ய மட்டுமே, எனக்கு தெரியும். பிரஜ்வல் ரேவண்ணா செய்திருப்பது குற்றம். வீடியோவை பரப்பியதும் குற்றம்தான்.
ரமேஷ் ஜார்கிஹோளியும் கூட, இதே போன்ற வழக்கில் சிக்கினார். அவரது வழக்கிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. ரேவண்ணா குடும்பம் வேறு, என் குடும்பம் வேறு என, குமாரசாமி கூறியுள்ளார். யாருடைய குடும்பத்தின் கவுரவம் பாதிக்கப்பட்டது என்பதையும், அவர் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.