ADDED : பிப் 14, 2025 11:03 PM
ஹாசன் மாவட்ட பொறுப்பில் இருந்து, தன்னை விடுவிக்கும்படி கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா, முதல்வர் சித்தராமையாவுக்கும், காங்., மாநில தலைவரான துணை முதல்வர் சிவகுமாருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து, டில்லியில் அமைச்சர் ராஜண்ணா நேற்று அளித்த பேட்டி:
ஹாசன் மாவட்ட பொறுப்பில் இருந்து, என்னை விடுவிக்கும்படி முதல்வர் சித்தராமையாவுக்கும், மாநில தலைவர் சிவகுமாருக்கும் கடிதம் அளித்துள்ளேன்.
என் மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்த வேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற வேண்டும். எனவே ஹாசன் மாவட்ட பொறுப்பில் இருந்து, என்னை விடுவிக்கும்படி கேட்டு கொண்டேன்.
வேறு எந்த மாவட்ட பொறுப்பையும் நான் கேட்க மாட்டேன். தலித் அமைச்சர்கள் தனித்தனியாக மாநாடு நடத்துவதன் அவசியத்தை, கட்சி மேலிடத்திடம் விவரித்துள்ளோம். நான் எஸ்.டி., சமுதாய ஓட்டுகளால் மட்டும் வெற்றி பெறவில்லை.
அனைத்து சமுதாயத்தினரின் ஆசிர்வாதம் வேண்டும். காங்கிரசுக்கு எந்த மாநாடு நடத்தினால், நல்லதோ, அந்த மாநாட்டை நடத்த வேண்டும்.
மாநாடுகளின் தேவையை, அகில இந்திய காங்கிரஸ் தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவரையும் மாநாட்டுக்கு அழைத்தோம்.
வரும் நாட்களில் மாநாட்டுக்கு வருவதாக கூறினார். கட்சி சார்பிலேயே மாநாடு நடத்தப்படும். சித்ரதுர்கா, தாவணகெரே அல்லது ஹூப்பள்ளியில் மாநாடு நடத்தப்படும்.
மாநாடு நடத்த மாநில காங்கிரஸ் தலைவரை கேட்க வேண்டியது இல்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பெரியவரா, மாநில காங்கிரஸ் தலைவர் பெரியவரா. மாநில தலைவர் தலைமையில் மாநாடு நடத்தப்படும். ஹாசனிலும் மாநாடு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.

