ADDED : ஆக 22, 2024 02:43 AM

புதுடில்லி :ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு நாளை புறப்பட்டு செல்கிறார். அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டினின் அழைப்பை ஏற்று, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்கா செல்ல உள்ளார். இது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்நாத் சிங் டூர் ப்ளான்:
அந்நாட்டின் ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபரின் உதவியாளர் ஜாக் சல்லினுடன் பேச்சு.
நோக்கம்: இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை மேம்படுத்துவதுடன், உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துதல்.
எதிரிப்படைகளை தாக்கி அழிக்கக்கூடிய 31 'எம்க்யூ - 9பி' ரக 'ட்ரோன்'கள் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள், 'ஸ்ட்ரைக்கர்'கள் எனப்படும் கவச வாகனங்கள் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு இயந்திரங்களை வாங்குவது பற்றி ஆலோசனை.
அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் சார்பில் எப் - 414 ரக இயந்திரங்களுடன் தயாரிக்கப்படும் 'எம்கே1ஏ தேஜாஸ்' விமானங்களை ஒப்படைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும், அவற்றை விரைவில் வழங்கவும் கோரிக்கை.
தொடர்ந்து, அமெரிக்க பாதுகாப்பு துறையினருடன் வட்ட மேஜை சந்திப்பு.
நோக்கம்: இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், எதிர்காலத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் விவாதம்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடல். வரும் 26ம் தேதி ராஜ்நாத் சிங் நாடு திரும்புகிறார்.