ADDED : ஜூலை 11, 2024 06:30 AM
தங்கவயல் : டிரஸ்ட் விடுதியில் இருந்து காணாமல் போன சிறுவனை ஐந்து ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த போலீசார், தங்கவயல் அரசு சிறுவர் காப்பகத்தில் சேர்த்தனர். பின், பெற்றோரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான்.
மாரிகுப்பம் ஸ்மித் சாலையில் 'நியூ லைப் டிரஸ்ட்' என்ற விடுதி உள்ளது. இங்கு முதியோர், ஆதரவற்றோர் தங்கி இருந்தனர். 2016ல் 6 வயது சிறுவனை, அவரது தாய் அழைத்து வந்து, தன் குடும்ப கஷ்டத்தை தெரிவித்து, தம் பிள்ளையை வளர்க்குமாறு சேர்த்துள்ளார். 2019 நவம்பரில், பள்ளிக்குச் சென்ற அந்த சிறுவன் விடுதிக்குத் திரும்பவில்லை.
விடுதிக் காப்பாளர், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. காணாமல் போன சிறுவன் குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வந்தனர்.
ஆனேக்கல் அருகில் சர்ஜாபூரில் சிறுவன் இருப்பதாக, இரண்டு நாட்களுக்கு முன்பு, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு சென்று, சிறுவனை அழைத்து வந்து, ஆண்டர்சன்பேட்டை அரசு சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதுபற்றி அறிந்த பெற்றோர், தம் பிள்ளையை தங்களிடமே ஒப்படைக்கக் கோரி, சிறுவர் காப்பகத்தில், மனு அளித்தனர். இந்த மனுவை விசாரித்த, சிறுவர் காப்பக அதிகாரி, சிறுவனை பெற்றோர் வசம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் போலீசார் வெளியிட்ட தகவல்கள்:
ஆனேக்கல்லில் வசித்த வந்த தம்பதி, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்வது வழக்கமாக இருந்தது. ஒரு முறை சிறுவனின் தந்தை, திருட்டு வழக்கில் சிறைக்கு சென்றார். இதனால், சிறுவனை, அவரது தாயே அழைத்து வந்து தங்கவயல் விடுதியில் சேர்த்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு பின், விடுதியில் இருந்து தப்பித்து, பெற்றோரிடமே சிறுவன் சென்றுள்ளார். இவரின் பெற்றோர் இடம் விட்டு இடம் மாறி குடியேறுவதால், அவர்களின் முகவரியை கண்டுப்பிடிப்பதில், போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.
இதற்கிடையில், சர்ஜாபூரில் சிறுவன், அவரது தந்தையுடன் இருப்பதை அறிந்த போலீசார், அங்கு சென்று அழைத்து வந்து, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.