ADDED : ஆக 20, 2024 11:50 PM

ராம்நகர் : ''பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அடிமை போல, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் செயல்படுகிறார்,'' என, ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹூசைன் விமர்சித்துள்ளார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
'மூடா முறைகேட்டில் முதல்வர் சித்தராமையா சிக்கி இருப்பதற்கு, துணை முதல்வர் சிவகுமார் காரணம்' என, மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகிறார். அவர் பொய் சொல்வதில் வல்லவர். பொய் தான் அவரது வீட்டுக் கடவுள். பொய்யை திரும்ப திரும்பச் சொல்லி, உண்மை ஆக்குவது தான் அவரது வேலை.
எங்கள் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தவும், மக்கள் தேர்ந்தெடுத்த அரசு மீது கரும்புள்ளி குத்தவும் முயற்சி நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அடிமை போல, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் செயல்படுகிறார்.
ராஜ்பவன் தற்போது பா.ஜ., அலுவலகமாகி உள்ளது. மாநிலத்தில் ஜனநாயக படுகொலை நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு நடந்த பல ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த, கவர்னரிடம் லோக்ஆயுக்தா அனுமதி கேட்டுள்ளது.
அவை குறித்து விசாரணை நடத்த அனுமதிக்கவில்லை. சித்தராமையா மீது மட்டும் வழக்கு தொடர அனுமதித்து இருப்பது சரியான நடவடிக்கை இல்லை. முதல்வர் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

