மம்தாவின் பேச்சுக்கு எதிர்ப்பு மே.வங்கத்தில் துறவியர் பேரணி
மம்தாவின் பேச்சுக்கு எதிர்ப்பு மே.வங்கத்தில் துறவியர் பேரணி
UPDATED : மே 26, 2024 03:03 AM
ADDED : மே 26, 2024 02:30 AM

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்தை கண்டித்து, பல்வேறு ஹிந்து அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட துறவியர் பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 42 லோக்சபா தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. நேற்று ஆறாம் கட்ட தேர்தல் நடந்தது.
குற்றச்சாட்டு
கடந்த 18ல் மேற்கு வங்கத்தின் கோஹத்தில் திரிணமுல் காங்கிரசின் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, 'ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் பாரத் சேவா ஆசிரமத்தில் உள்ள சில துறவியர், டில்லி பா.ஜ., தலைவர்களின் கட்டளைப்படி செயல்படுகின்றனர்.
'அவர்கள் தங்களின் ஆன்மிக பணியை விடுத்து, இதுபோன்ற பணிகளை தான் மேற்கொள்கின்றனர்' என குற்றஞ் சாட்டினார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, 'ஓட்டு வங்கி அரசியலுக்காக ஹிந்து அமைப்பினர் மீது பொய் குற்றச்சாட்டுகளை மம்தா சுமத்துகிறார்' என்றார்.
இந்நிலையில் பாரத் சேவா ஆசிரம நிர்வாகி சுவாமி பிரதீப்தானந்தா, மம்தாவுக்கு சமீபத்தில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதில் அவர், 'மம்தா, தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அதற்கு பதிலளிக்கும் வகையில், மற்றொரு பிரசார கூட்டத்தில் பேசுகையில், 'ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் பாரத் சேவா ஆசிரமம் ஆகியவை சமுதாய நோக்குடன் பல்வேறு தொண்டுகளை மேற்கொண்டு வருகின்றன.
'அந்நிறுவனங்களுக்கு எதிராக நான் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், அதில் பணியாற்றும் சிலர் தான் அரசியல் செய்து வருகின்றனர். குறிப்பாக, பாரத் சேவா ஆசிரமத்தின் நிர்வாகி கார்த்திக் மஹாராஜ் என்கிற சுவாமி பிரதீப்தானந்தா என்பவர் பா.ஜ., வில் இணைந்தே பணியாற்றலாம்' என்றார்.
கண்டன குரல்
இதுபோன்ற தொடர்ந்து அவதுாறு கருத்துகளை தெரிவித்து வரும் முதல்வர் மம்தா பானர்ஜியை கண்டிக்கும் வகையில், நேற்று கோல்கட்டா மற்றும் சிலிகுரி ஆகிய இடங்களில், 100க்கும் மேற்பட்ட துறவியர் பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த பேரணியில், மம்தா குற்றஞ்சாட்டிய கார்த்திக் மஹாராஜும் முன்னின்று பங்கேற்று தன் கண்டன குரலை எழுப்பினார்.
அப்போது கார்த்திக் மஹாராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒட்டுமொத்த துறவியர் சமூகத்தையே முதல்வர் மம்தா பானர்ஜி இழிவுப்படுத்தி உள்ளார். இதை, துறவியர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,” என்றார்.