ADDED : ஆக 13, 2024 11:58 PM

ஷிவமொகா : ஷிவமொகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், இரு மகன்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
ஷிவமொகா மாவட்டம், கிளார்க் நகரை சேர்ந்தவர்கள் புவனேஸ்வரி, 45, இவரின் மகன்கள் மாருதி, 25, தர்ஷன் 21. புவனேஸ்வரியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் புவனேஸ்வரி வேலை செய்து வந்தார்.
மூத்த மகன் மாருதி, காச நோயால் பாதிக்கப்பட்டதால், வீட்டிலேயே உள்ளார். இரண்டாவது மகன் தர்ஷன், மளிகைக் கடையில் வேலை செய்தார்.
நேற்று காலையில், மாருதி, தர்ஷன் ஆகிய இருவரையும், அவரது தாய் மாமா சிவகுமார் போனில் தொடர்பு கொண்டார்.
ஆனால் இருவரும் போனை எடுக்கவில்லை. உடனடியாக தங்கை வீட்டுக்கு சிவகுமார் வந்தார். உள்புறமாக வீடு பூட்டிக் கிடந்தது.
கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது, மூவரும் அறையில் உறங்குவது தெரிந்தது. சத்தம் போட்டு அழைத்தும் யாரும் எழவில்லை.
சந்தேகமடைந்து, தொட்டபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். மூவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
சிவகுமார் கூறுகையில், ''இரண்டு நாட்களாக எனது சகோதரி, மருமகன்கள் போனை எடுக்கவில்லை. இங்கு வந்து பார்த்தபோது, அவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. ஏன் என்று தெரியவில்லை,'' என்றார்.
காரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

