ADDED : செப் 10, 2024 06:50 AM
துமகூரு: துமகூரு மாவட்டம், திப்துாரின் ராம்ஷெட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கமலம்மா, 43. இவரது மகள் வீணா, 16, பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை 9:00 மணியளவில் மகளை பள்ளிக்கு அனுப்ப பஸ் நிறுத்தத்துக்கு இருவரும் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஊழியர்களுடன் தனியார் கார்மென்ட்சுக்கு சொந்தமான பஸ், தேசிய நெடுஞ்சாலை 206ல் வந்து கொண்டிருந்தது.
வேகமாக வந்த பஸ், கட்டுப்பாட்டை இழந்து, தாய், மகள் உட்பட ஐந்து பேர் மீது மோதியது.
தாயும், மகளும், சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மற்ற மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், அப்பகுதியினர், சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த திப்துார் நகர் போலீசார், இறந்தவர்களின் உடலை எடுக்க முற்பட்டனர். ஆனால், இறந்தவர்களின் உறவினர்கள், அப்பகுதியினர், 'இப்பகுதியில் இதுவரை ௫ பேர் உயிரிழந்து உள்ளனர். இங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய நஷ்ட ஈடு வழங்காமல், உடலை எடுக்க விடமாட்டோம்' என கூறினர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னரே, போராட்டத்தை கைவிட்டனர்.
இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.