ADDED : ஜூன் 29, 2024 03:18 AM

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில், டீ போட்டு தராத மருமகளை மாமியார் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதின் அட்டப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மீரி பேகம், 28. இவர், திருமணமாகி தன் கணவர் வீட்டில் வசித்து வந்தார். இவரது மாமியார் பர்சானா.
மருமகள், மாமியார் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதை அக்கம் பக்கத்தினர் கவனித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, அஜ்மீரி பேகத்தின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது சமையலறையில் அவர் சுயநினைவு இழந்த நிலையில் விழுந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அஜ்மீரி பேகத்தின் மாமியார் பர்சானாவிடம் விசாரணை நடத்தினர்.
அவர் கூறுகையில், 'மருமகளிடம் டீ போட்டு தரும்படி கேட்டேன். அவர் முடியாது என கூறினார். இது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் துணியை எடுத்துச் சென்று, பின்னால் இருந்து அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்' என்றார்.
இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.