ADDED : மார் 25, 2024 06:48 AM
மங்களூரு: தட்சிண கன்னடாவில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பது தெரிந்து உள்ளது. ஒரு வீட்டிற்கு வந்து மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டு சென்று உள்ளனர்.
கர்நாடகாவின் தட்சிண கன்னடா - குடகு மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில், நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக, நக்சல் ஒழிப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதனால் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன், தட்சிண கன்னடாவின் கூஜிமலே என்ற கிராமத்தில் உள்ள, மளிகை கடைக்கு வந்த நக்சல்கள், உணவு பொருட்களை வாங்கி சென்று உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கூஜிமலேயில் இருந்து 25 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள, ஜினேகிடு என்ற கிராமத்திற்கு, நக்சல் கும்பல் வந்துள்ளது. கையில் ஆயுதங்களுடன் இருந்த கும்பல், ஒரு வீட்டிற்கு சென்று, மொபைல் போன்களுக்கு சார்ஜ் போட்டு உள்ளனர்.
அந்த வீட்டில் இருந்தவர்களிடம், சகஜகமாக பேசி உள்ளனர். ஒரு மணி நேரம் கழித்து, அங்கிருந்து சென்று உள்ளனர். நக்சல்கள் நடமாட்டத்தால் தட்சிண கன்னடா - குடகு மாவட்ட மக்கள் பீதியில் உள்ளனர்.

