ADDED : ஜூலை 13, 2024 04:55 AM

பொம்மனஹள்ளி: கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த காதலியின் 3 வயது மகனை கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, பொம்மனஹள்ளியின் விராட் நகரில் வசித்து வருபவர் சதீஷ். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு 3 வயதில் அஸ்வின் என்ற ஆண் குழந்தை இருந்தது.
கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னையால் மகன் அஸ்வினுடன், பசவன்புரத்தில் ரம்யா தனியே வசித்து வருகிறார்.
இவர்களின் வீட்டின் எதிரே மைக்கேல் ராஜு என்பவர், இரு சக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கேரேஜ் நடத்தி வருகிறார்.
இருவரும் நட்பாக பேச துவக்கினர். நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ரம்யாவுடன் பேசும் போதெல்லாம், குழந்தை அஸ்வின் அழுது கொண்டே இருக்குமாம். இதனால் ராஜு கோபம் அடைவாராம்.
ஜூலை 6ம் தேதி ரம்யா, மகனை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றிருந்தார். அப்போது குழந்தை அழத் துவங்கியது. அங்கு சென்ற ராஜு, ரம்யாவுடனான உறவுக்கு குழந்தை இடையூறாக இருப்பதை எண்ணி, குழந்தையை ஓங்கி அடித்துள்ளார்.
குழந்தை சுவரில் மோதியதில், தலையில் வீக்கம் ஏற்பட்டிருந்தது.
இதை வீட்டுக்கு வந்த ரம்யாவிடம் கூறாமல், மைக்கேல் ராஜு சென்று விட்டார். அன்றிரவு குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கிருந்து நிமான்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் தலையில் ரத்தம் உறைந்ததால், குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
ரம்யா அளித்த புகாரின்படி, மைக்கேல் ராஜை பொம்மனஹள்ளி போலீசார் கைது செய்தனர்.

