ADDED : செப் 07, 2024 07:32 AM

பெங்களூரின், பல இடங்களில் இனிப்பு கடைகள் இருந்தாலும், சில கடைகள் மட்டும் மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இதற்கு அங்கு கிடைக்கும் இனிப்புகள் தரமாக, சுவையாக இருப்பதே காரணம். இவற்றில் வெங்கடேஸ்வரா இனிப்பு கடையும் ஒன்றாகும்.
பல ஆண்டுகளுக்கு முன், அங்கொன்றும், இங்கொன்றுமாக இனிப்பு கடைகள் இருந்தன. ஆனால் இப்போது தடுக்கி விழுந்தால், ஒரு இனிப்பு கடையை காணலாம். இத்தனை கடைகள் இருந்தாலும், மக்களை ஈர்ப்பது பாரம்பரிய கடைகள் மட்டுமே.
பெங்களூரின், பலேபேட் மெயின் ரோட்டில், 'வெங்கடேஸ்வரா இனிப்பகம்' உள்ளது. இங்கு விற்கப்படும் மைசூர் பாக்குக்கு 100 வயதாகும். மிகவும் பழமையான கடையாகும். வெங்கடாசலபதி என்பவர், சிக்கபல்லாபூரில் சிறிய அளவில் இனிப்பு வியாபாரம் செய்தார். அங்கு 35 ஆண்டுகள் கடை நடத்தினார். அதன்பின் பெங்களூரின் பலேபேட் மெயின் ரோட்டுக்கு, வியாபாரத்தை மாற்றினார். 1954ல் இனிப்பு கடையை துவக்கினார்.
அன்று முதல் இன்று வரை, மூன்று தலைமுறைகள் மாறின. ஆனால் மைசூரு பாக்கின் சுவையில், மணம் மற்றும் தரத்தில் கடுகளவும் மாற்றம் இல்லை. அதே சுவையில் கிடைப்பது ஆச்சரியமான விஷயமாகும்.
மைசூரு பாக்குடன், பாதாம் அல்வா, தேங்காய் பர்பி, லட்டு, ஐஸ்கிரீம் பர்பி, ஒயிட் சாக்லேட் என பல்வேறு இனிப்புகள் மக்களை கவர்ந்துள்ளன. அனைத்து இனிப்புகளிலும் சுவைக்கும், மணத்துக்கும் ரசாயனம் சேர்ப்பது இல்லை. குங்குமப்பூ, ஏலக்காய் உட்பட, இயற்கையான வாசனை பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதை சாப்பிடும் போது, தங்கள் தாயின் கை மணம் நினைவுக்கு வராமல் இருக்காது
- நமது நிருபர் -.