பெண்ணின் நுரையீரலில் சிக்கிய மூக்குத்தி 12 ஆண்டிற்குப்பின் அகற்றம்
பெண்ணின் நுரையீரலில் சிக்கிய மூக்குத்தி 12 ஆண்டிற்குப்பின் அகற்றம்
ADDED : மே 02, 2024 02:36 AM
திருவனந்தபுரம்:கேரளாவில் 12 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மூக்குத்தியின் ஒரு பாகத்தை பெண்ணின் நுரையீரலில் இருந்து நவீன சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே சாஸ்தாம்கோட்டையை சேர்ந்த 44 வயதான பெண் அணிந்திருந்த மூக்குத்தியின் ஒரு பகுதியை காணவில்லை. 12 ஆண்டுகளுக்கு முன் இந்த சம்பவம் நடந்தது.நாட்கள் செல்ல செல்ல அந்தப்பெண் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். ஆஸ்துமாவாக இருக்கும் என்று கருதி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் கொல்லத்தில் தனியார் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் நுரையீரலில் ஏதோ ஒரு சிறிய பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில் பெண்ணின் நுரையீரலில் சிக்கி இருப்பது தங்க மூக்குத்தியின் ஒரு பாகம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 'ரிஜிட் பிராங்ககோஸ்கோப்பி 'என்ற நவீன சிகிச்சை மூலம் அந்த ஒரு செ.மீ. நீளமுள்ள மூக்குத்தியின் பாகத்தை வெளியே எடுத்தனர். அந்த பெண் தூங்கும் போது மூக்குத்தியின் பாகம் உடைந்து நுரையீரலுக்கு சென்றிருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது பெண் நலமாக உள்ளார்.

