ஏரிகள் ஆய்வில் அலட்சியம் ; ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு
ஏரிகள் ஆய்வில் அலட்சியம் ; ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு
ADDED : ஆக 16, 2024 10:52 PM
பெங்களூரு : கிராமப்புற மக்களின் உயிர் நாடியான ஏரிகள், ஆக்கிரமிப்பில் இருந்து இன்னும் விடுபடவில்லை. கர்நாடகாவின் 41,000 ஏரிகளில், 12,285 ஏரிகளில் சர்வே நடத்துவதில், அதிகாரிகள் ஆர்வம் காண்பிக்கவில்லை.
ஆறுகள், அணைகள் இல்லாத கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் ஏரிகளை நம்பியுள்ளனர். கர்நாடக சிறிய நீர்ப்பாசனத்துறை ஆவணங்களின் படி, மாநிலத்தில் 40,998 ஏரிகள் உள்ளன. இவைகள் சிறிய நீர்ப்பாசனம் மட்டுமின்றி, நீர்ப்பாசனம், உள்ளாட்சிகள், கிராம வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
ஏரிகளை அந்தந்த மாவட்டங்களின் கலெக்டர்கள், மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகள் மேற்பார்வையிடுகின்றனர். ஏரிகளை நிர்வகிக்க உள்ளூர் மக்களின் ஒருங்கிணைப்பில், ஏரி சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, ஏரிகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு ஆணையமும் அமைந்துள்ளது.
இத்தனை நிர்வகிப்பு வசதிகள் இருந்தும், மாநிலத்தின் 25 சதவீதத்துக்கும் அதிகமான ஏரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. மாநிலத்தில் மொத்தம் 40,988 ஏரிகள் உள்ளன. இவற்றில் 2024 ஜூன் இறுதி வரை, 28,713 ஏரிகளில் ஆய்வு நடத்தப்பட்டன. இவற்றில் 10,988 ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், 6,081 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் 4,907 ஏரிகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டியுள்ளது.
பெங்களூரு, மைசூரில் மிக அதிகமான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டது சர்வேவில் தெரிந்தது. பெங்களூரில் உள்ள 14,967 ஏரிகளில், 5,109 ஏரிகளின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதில், 3,042 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதேபோன்று மைசூரில் 4,436 ஏரி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதில், 2,199 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மாநிலம் முழுதும், 12,285 ஏரிகளில் சர்வே நடத்துவதில், அதிகாரிகள் ஆர்வம் காண்பிக்கவில்லை.
ஆக்கிரமிப்பை அகற்றும் பணி தாமதமாவதற்கு, முதல்வரும் அதிருப்தி தெரிவித்துள்ளார், மூன்று மாதத்தில் பணிகளை முடிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.