இன்னும் ஒரு வாரத்தில் புதிய கட்சி: சம்பாய் சோரன் திட்டம்
இன்னும் ஒரு வாரத்தில் புதிய கட்சி: சம்பாய் சோரன் திட்டம்
UPDATED : ஆக 21, 2024 07:07 PM
ADDED : ஆக 21, 2024 06:45 PM

ராஞ்சி: புதிய கட்சியை துவக்குவது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்போவதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச்சேர்ந்த முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பிப்ரவரியில் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார்.
கடந்த ஜூனில் ஜாமினில் வெளியே வந்தவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க வேண்டி சம்பாய் சோரன் பதவி விலகினார் .
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் டில்லி சென்றார் சம்பாய் சோரன், தொடர்ந்து பா.ஜ.,வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாயின.
இதனிடையே ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அதிருப்தியில் உள்ள சம்பாய்சோரன் தனது அடுத்த நகர்வாக புதிய கட்சியை துவக்கி பா.ஜ.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்வது, அல்லது அரசியலிலிருந்து விலகுவது, அல்லது பா.ஜ.வில் இணைவது என மூன்று வாய்ப்புகளில் ஒன்றை தேர்வு செய்ய உள்ளதாக அவரது நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
இது குறித்து சம்பாய் சோரன் கூறியதாவது: புதிய அமைப்பை உருவாக்கி அதனை வலுப்படுத்துவேன், இன்னும் ஒரு வாரத்தில் முடிவை அறிவிப்பேன். ஆனால் அரசியலில் இருந்து ஒய்வு பெற மாட்டேன் என்றார்.