ADDED : ஆக 06, 2024 01:22 AM
ஹாஜிபூர், பீஹாரில், 'கன்வர்' யாத்திரைக்கு சென்ற பக்தர்களின் வாகனம் மீது உயரழுத்த மேல்நிலை மின் கம்பி உரசியதில், ஒன்பது பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
வட மாநிலங்களில், 'ஷ்ரவண' மாதத்தில், கங்கை நதியிலிருந்து புனித நீர் எடுத்து வந்து, தங்கள் பகுதியில் உள்ள சிவ பெருமான் கோவில்களில் பக்தர்கள் அபிஷேகம் செய்வது, 'கன்வர்' யாத்திரை எனப்படுகிறது.
பீஹாரின் வைஷாலி மாவட்டத்தின், சோனேபூர் என்ற பகுதியில் உள்ள பாபா ஹரிஹர்நாத் கோவிலுக்கு அபிஷேகம் செய்வதற்காக, நேற்று முன்தினம் இரவு, 11:15 மணிக்கு, 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் வாகனத்தில் சென்றனர்.
சுல்தான்பூர் கிராமம் அருகே வாகனம் வந்த போது, உயரழுத்த மேல்நிலை மின் கம்பி மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில், ஒன்பது பக்தர்கள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் இருவர் காயமடைந்தனர்.
தகவலறிந்த மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கன்வர் யாத்திரைக்கான பிரத்யேக வழியில் வாகனம் செல்லாதது தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த ஐக்கிய ஜனதா தள தலைவரும், மாநில முதல்வருமான நிதீஷ் குமார், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். கடந்த 2ல், ஜார்க்கண்டில் இதேபோல் மின்சாரம் தாக்கி, கன்வர் யாத்திரை சென்ற ஐந்து பக்தர்கள் உயிரிழந்தனர்.